மாநாட்டில் போடப்பட்டது 1 லட்சம் இருக்கை.. வந்ததோ 5000 பேர்.. கர்நாடகாவில் அமித்ஷாவுக்கு ஷாக்
Recommended Video
ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் பாஜக சார்பில், அக்கட்சி தலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் சமூக மாநாட்டில் சேர்கள் காலியாக கிடந்த சம்பவம் அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மே 12ம் தேதி கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக நடுவே கடும் போட்டி நிலவுகிறது. பல்வேறு ஜாதிகளின் வாக்குகளை ஈர்க்க இரு கட்சிகளும் போட்டி போடுகின்றன.
பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியான லிங்காயத்துகளுக்கு சிறுபான்மை மத அடையாளம் கொடுத்து சித்தராமையா அரசு அதிரடி காட்டி கணிசமான வாக்குகளை காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் வாய்ப்பை உருவாக்கிவிட்டது.
மாநாடு ஏற்பாடு
இந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை ஈர்க்க பாஜக முயன்று வருகிறது. இதற்காக ஹாவேரி மாவட்டத்தின், ககினேலே பகுதியில் சமீபத்தில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. சித்தராமையாவின் குருபா ஜாதியை சேர்ந்தவரான பாஜகவின் முன்னணி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய பணிக்கப்பட்டார்.
5000 பேர் மட்டுமே
கூட்டம் அபாரமாக வரப்போகிறது என நினைத்து 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டன. ஆனால், அமித்ஷா மேடையேறி பேசிய பிறகும் அங்கே வந்தது சுமார் 5000 பேர் மட்டுமே. இதனால் அமித்ஷா கடுமையாக அப்செட் ஆகிவிட்டாராம். ஈஸ்வரப்பாவிடம் இதுகுறித்து பாஜக தலைமை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் கோபம்
எடியூரப்பாவுடன் உள்ள மோதல் காரணமாக ஈஸ்வரப்பா இவ்வாறு சொதப்பிவிட்டாரா என்ற கோணத்திலும் பாஜக தலைமை விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், பாஜகவின் பொய் வாக்குறுதிகளால் கோபமடைந்துதான், அதிகப்படியான பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் மாநாட்டு பக்கம் தலைகாட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக பாஜகவோ, கூட்டம் இருப்பதை போன்ற போட்டோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறது.
ராகுல் காந்தியுடன் சந்திப்பு
இதனிடையே, நிரஞ்சனானந்தா புரி சுவாமிஜியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமித்ஷா கூறியும் இதுவரை அவர் பாஜக தலைவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. அதேநேரம், சுவாமிஜியை ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார். பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவு தலைவர்களில் ஒருவரான நிரஞ்சனானந்தா சுவாமிஜியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு ஈஸ்வரப்பாவிடம், அமித்ஷா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம்.