ஆந்திரா தலைநகரமாகிறது விசாகப்பட்டினம்.. ஜெகன்மோகன் ரெட்டி போட்ட போடு! பிளான் ரெடி.. விறுவிறு ஏற்பாடு
அமராவதி: ஆந்திராவின் தலைநகரத்தை விசாகப்பட்டினத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தீவிரமாக செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு புத்தாண்டான யுதாதி பண்டிக்கைக்கு பிறகு விசாகப்பட்டினத்தை முதன்மை தலைநகரமாக ஜெகன்மோகன் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி அரசின் இந்த நடவடிக்கையை ஆந்திராவின் ஒருபகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
விண்ணோடு மேளச்சத்தம் என்ன! ஊட்டிக்கு போக தேவையில்லை! 3 நாள் மழையால் குளிரப் போகும் மாவட்டங்கள்!
தலைநகராக மாறிய அமராவதி
ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த பின்னர், தெலங்கானா தலைநகரமாக ஐதராபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து, ஆந்திராவுக்கு குண்டூர் - விஜயவாடா இடையே மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். அதன்படி, புதிய தலைநகருக்கான வசதிகளை செய்ய விவசாயிகளிடம் இருந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலங்கள் கேட்கப்பட்டன. தலைநகர் அமைப்பதற்காக விவசாயிகளும் தங்கள் நிலங்களை வழங்கினர்.
3 தலைநகரங்கள் அறிவிப்பு
பின்னர் அமராவதியில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவை அமைக்கப்பட்டு, அங்கேயே சில பேரவைக் கூட்டங்களும் நடைபெற்றன. பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி வந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அமராவதியில் சட்டப்பேரவையும், கர்னூலில் உயர்நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் அமைக்க சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்தார். இதனை தெலங்கு தேசம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அதேபோல், தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். ஆனால், இப்போராட்டங்களுக்கு ஜெகன் அரசு பணியவில்லை.
ஆந்திராவுக்கு அதிர்ச்சியளித்த தீர்ப்பு
இதன் தொடர்ச்சியாக, அமராவதிதான் ஆந்திரா தலைநகரமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விவசாயிகள் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. அதில், அமராவதிதான் ஆந்திராவின் தலைநகரமாக இருக்க வேண்டும் என்றும், இங்குள்ள அரசு அலுவலகங்களை வேறு எங்கும் மாற்றக்கூடாது எனவும் கூறப்பட்டது.
பரபரப்பாகும் விசாகப்பட்டினம்
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஆந்திரா அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை, வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த விசாரணைக்கு பிறகு விசாகப்பட்டினத்திற்கு தலைநகரை மாற்ற ஜெகன்மோகன் அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, யுகாதி பண்டிகைக்கு பிறகு அதாவது ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகளை முடிக்க அரசு ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு முதல்வர் அலுவலகத்தையும், அமைச்சர்களின் அலுவலகங்களையும் விசாகப்பட்டினத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விசாகப்பட்டினத்தை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த ஜெகன் அரசு ஏற்பாடு செய்து வருவதகாக சில மூத்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.