தொலைபேசி ஒட்டுக் கேட்பு பஞ்சாயத்து- தெலுங்கானா போலீஸ் பாதுகாப்பு தூக்கிப் போட்ட 'நாயுடு'
ஹைதராபாத்: தமது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து தெலுங்கானா போலீஸ் அளித்து வந்த பாதுகாப்பை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தூக்கி எறிந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டு போட எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அவரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியானது. தெலுங்கு டிவி சேனல்கள் இதை ஒளிப்பரப்பி பரபரப்பை ஏற்படுத்தின.
இதன் மூலம் தமது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்தார். மேலும் மாநில அமைச்சர்கள், உறவினர்கள், உயர் அதிகாரிகள் 120 பேரின் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாகவும் உளவுத்துறை தகவல் தெரிவித்தது.
ஆனால் இந்த புகாரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மறுத்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஸ்டீபன்சன் செல்போனில் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கலாம். சந்திரபாபு நாயுடுவை இதில் சிக்க வைப்பதற்காக ஸ்டீபன்சன் எம்.எல்.ஏ.வின் செல்போனில் திட்டம் போட்டு டேப் செய்யப்பட்டிருக்கலாம். அவர்களே அதை டிவி சேனலுக்கு அனுப்பி இருக்கலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு இதுவரை ஆந்திரா மாநில போலீசாரும், தெலுங்கானா மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு கொடுத்து வந்தனர். சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் வெளிப்புற பாதுகாப்பு பணியில் தெலுங்கானா மாநில போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
வீட்டுக்குள் பாதுகாப்பை ஆந்திர மாநில போலீசார் கவனித்து வந்தனர். தற்போது தெலுங்கானா அரசு கொடுக்கும் தெலுங்கானா போலீசாரின் பாதுகாப்பை சந்திரபாபு நாயுடு உதறியுள்ளார். அவர் வீடு மற்றும் கட்சி அலுவலகம் முழுவதிலும் ஆந்திரா போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த எம்.எல்.சி. தேர்தலில் ஓட்டு போட எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அவரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியானது. தெலுங்கு டிவி சேனல்கள் இதை ஒளிப்பரப்பி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் தமது வீட்டுக்கு தெலுங்கானா போலீஸ் அளித்து வந்த பாதுகாப்பை நிராகரித்திருக்கிறார் சந்திரபாபு.