ரூ.598.68 கோடியில் பெங்களூர் சாலைகளை 11 மாதம் 'வெள்ளையடிக்கிறார்கள்'! டிராபிக்கால் மக்கள் கோபம்
பெங்களூர்: "ரூ.598.68 கோடி செலவில் பெங்களூர் சாலைகளை வெள்ளையடிக்கிறார்கள்" என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
(white-topping) என்ற பெயரில் கர்நாடக அரசு, மக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது ஆளும் கட்சி மீது மக்களின் கோபத்தைதான் சம்பாதித்து தரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இந்த திட்டம் மேலும் பல சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுதான் கொடுமை.
அனுபவித்தீர்களா
ஞாயிற்றுக்கிழமை கூட, பொம்மனஹள்ளியிலிருருந்து, கோரமங்களா ஃபோரம் மால் வரை, 4 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறதா, 10 நிமிடத்தில் போக வேண்டிய இடத்திற்கு செல்ல 1 மணி நேரம் பிடிக்கிறதா, பஸ்கள் வேறு ரூட்டில் திருப்பிவிடப்பட்டுள்ளதால், கால் கடுக்க நடந்தீர்களா, இதெற்கெல்லாம் பெங்களூர்வாசிகளின் பதில் ஆம் என்றால், அதற்கு காரணம் வழக்கமான டிராபிக் கிடையாது. இந்த வெள்ளையடிப்பு திட்டம்தான் காரணம்.
பெங்களூர் டிராபிக் நெரிசல்
தார்ச்சாலைகள் மீது கான்க்ரீட் பூச்சு வேலை செய்வதற்குத்தான் white-topping என்று பெயர். சாலைகள் கூடுதலாக உழைக்கும் என்பதே இந்த திட்டத்திற்கு காரணம். ஒசூர் ரோடு, மைசூர் ரோடு, கோரமங்களா 20வது மெயின் போன்ற பகுதிகளில் ஏற்கனவே இந்த பணி நடப்பதால்தான் விழிபிதுங்கும் டிராபிக்கை கொண்ட பெங்களூர் இப்போது கூடுதலாக சாலை நெருக்கடியை சந்தித்து வருகிறது.
டிராபிக் நெரிசல்
இந்த பணியால் பல சாலைகள் ஒன்வேயாக்கப்பட்டதால், பிற சாலைகளில் கூட்டமோ கூட்டம். கடந்த 10 வருடங்களாக மெட்ரோ ரயில் பணிகளால் டிராபிக் நெரிசலை சந்தித்த பெங்களூர் மக்கள், இப்போதுதான் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், மீண்டும் இப்படி ஒரு பிரச்சினை.
புதிய சாலைகள்
இந்த நிலையில் பன்னேருகட்டா சாலை, லால்பாக் கேட் சந்திப்புகள், பிரிகேட் சாலையில் ஆரம்பித்து, ஆடுகோடி, மடிவாளா வழியாக சில்க்போர்ட்டுவரை, செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட சர்ஜாப்புரா சாலை, என இன்னும் 26 பகுதிகளில் white-topping பணி துவங்க அரசு அனுமதித்துள்ளது. 11 மாதங்களுக்குள் பணியை முடிக்க உத்தரவிட்டுள்ள போதிலும், காலதாமதம் ஏற்படும் என்கிறார்கள். இதற்கான திட்ட மதிப்பு ரூ. 598.68 கோடியாகும்.