முதல்வர் பேச்சை கேட்காத உபி எம்எல்ஏக்கள்.. பான் பராக்கை மென்னு துப்பி சட்டசபையே நாறுதாம்
உத்தரபிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் பேச்சை அவர்களது எம்எல்ஏக்களே கேட்கவில்லை. பான் பராக்கை வாயில் போட்டு மென்று துப்பி சட்டசபையையே நாறடித்து வைத்துள்ளார்களாம் மாண்புமிகு உறுப்பினர்கள்.
லக்னோ: பான் பராக், குட்கா போன்ற போதைப் பொருட்கள் மீது தடை போட்டாலும், அதை மென்று துப்பி சட்டசபையை நாறடித்துள்ளார்களாம் உத்தரபிரதேசத்தின் மாண்புமிகு எம்எல்ஏக்கள்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் பான் மசாலா, குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
ஆனால், இதனை அம்மாநிலத்தின் எம்எல்ஏக்களே பின்பற்றத் தயாராக இல்லை. அதிலும், இம்மாநிலத்தில் பாஜக பெருவாரியாக வெற்றி பெற்று அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. என்றாலும், பாஜக முதல்வரின் ஆணைக்கே பாஜக எம்எல்ஏக்கள் கட்டுப்படத் தயாராக இல்லை.
கடந்த 11ம் தேதி அம்மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. 12ம் தேதி சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன், போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்ட போது, எதிர்க்கட்சி தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரியின் இருக்கை அருகில் வெடிப் பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்களும் தீவிரவாத தடுப்பு போலீசாரும் சட்டசபையை சல்லடையாக சலித்தனர். அப்போது, பான் மசாலா மற்றும் குட்கா பாக்கெட்டுகள் எம்எல்ஏக்களின் இருக்கைக்கு அடியில் இருந்து எடுத்துள்ளனர் போலீசார். மேலும், எம்எல்ஏக்களின் இருக்கையைச் சுற்றி பான் பராக்கை மென்று துப்பிய கறைகளும் இருக்கிறதாம். இதனைப் பார்த்து முகம் சுளித்தவாறே அவர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டார்கள்.
முதல்வர் போடும் சட்டம், ஆணை எல்லாம் மக்களுக்கானது. எம்எல்ஏக்களுக்கானது அல்ல என்று நிரூபித்திருக்கிறார்கள் உ.பி. மாநில சட்டசபை உறுப்பினர்.