வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஓடி, பறந்து பார்வையிடும் ஆந்திர முதல்வர் நாயுடு- ஏங்கும் தமிழக மக்கள்!
நெல்லூர்: தமிழகத்தைப் போலவே ஆந்திராவையும் புரட்டி எடுக்கிறது பருவமழை... நம் கடலூரைப் போல ஆந்திராவின் நெல்லூர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு வருகிறார். ஆனால், தமிழகத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதி மக்களோ முதல்வர் ஜெயலலிதா எப்போது பார்வையிட வருவார் என பெரும் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
வடதமிழகத்தை வெளுத்து வாங்கியது வடகிழக்குப் பருவமழை. குறிப்பாக சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை.. கடலூர் ஒரு மாத காலமாக வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தத்தளிக்கிறது.
சென்னை நகரின் பல பகுதிகள் ஏரி நீர் சூழ்ந்தும் மழை வெள்ளத்தாலும் தீவு தேசங்களாக தத்தளிக்கின்றன. மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கடலூரில் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். சென்னையில் ஒரே ஒரு நாள் முதல்வர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். அதுவும கூட அதிகாரிகள் முன்பே வந்து ஜெயலலிதாவின் வேன் செல்ல இருந்த சாலைகளில் இருந்த தண்ணீரை மோட்டர் பம்புகள் வைத்து அவசர, அவசரமாக வெளியேற்றிய பிறகு தான்.
பின்னர் வேனில் அமர்ந்தபடி, வேனுக்குள் இருந்தபடி அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டுவிட்டு, கஞ்சிக்கும் அடுத்த வேளை உடுத்து மாத்து துணிகளுக்கும் வழியற்று தத்தளிக்கும் மக்களிடத்தில் தேர்தல் பிரசாரமாக வாக்காளப் பெருமக்களே என்று விளித்து 'சிற்றுரை'களை ஆற்றிவிட்டு தனது பெருங்கடமையை நிறைவு செய்துவிட்ட நினைப்பில் வீடு திரும்பிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
சுனாமி, தானே புயலைவிட கோரத்தாண்டவமாடி கடலூரை அழித்து போட்டிருக்கிறது பெருவெள்ளம்.. அத்தனை ஏரிகளும் நிரம்பி முகத்துவாரங்கள் மூடிக் கிடக்க குடியிருப்புகளை மூழ்கடித்து தென்சென்னையை தீவாக்கி வைத்திருக்கிறது பெருமழை வெள்ளம்..
இங்கெல்லாம் முதல்வர் ஜெயலலிதா பார்வையிடவில்லை. இப்பகுதி மக்களோ, முதல்வர் நேரடியாக கள நிலைமையைக் கண்டால் மட்டுமே தங்களுக்கு விமோசனம் கிடைக்கும்; எப்படியும் முதல்வர் ஜெயலலிதா பார்வையிட வந்தே தீருவார் என கண்ணீருக்கும் தண்ணீருக்கும் மத்தியில் தவியாய் தவித்து வருகின்றனர்.... ஆனால் அது நடப்பது எப்போது என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை!
வழக்கமாக கொடநாடாகட்டும் பெங்களூராகட்டும் தனி விமானம், ஹெலிகாப்டர்கள் என கிளம்பும் ஜெயலலிதா கடலூர் பக்கம் ஹெலிகாப்டரில் கூட வந்து பார்க்கவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து இடம்பெயர்ந்த பருவமழை ஆந்திராவையும் ஒரு கை பார்த்து வருகிறது. குறிப்பாக நம் கடலூரைப் போலவே நெல்லூர் மாவட்டத்தை நாசமாக்கியுள்ளது பருவமழை. இதுவரை மொத்தம் 40 பேர் வரை பலியாகி உள்ளனர்.
ஆனால் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ, வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிடுகிறார்.. வாகனத்தில் சென்று இறங்கி மக்களிடம் நேரடியாக பேசி குறைகளை கேட்டறிகிறார்... கடந்த 3 நாட்களுக்கும் மேலாக அவரது இந்த "வெள்ள" பயணம் தொடர்ந்து நீடிக்கிறது.
ஒரு முதல்வர் என்றால் இப்படி மக்கள் துயரத்தில் இருக்கும் போது ஓடோடி சென்று பார்வையிடுபவராக இருக்க வேண்டுமே தவிர ஒரு சில ஏரியாக்களுக்கு சும்மா "வேன்" விசிட்டராக இருக்கக் கூடாது என கடலூரிலும் சென்னையிலும் பொதுமக்கள் ஏக்கப் பெருமூச்சுவிடுவது பெரிதாகவே எல்லோருக்கும் கேட்கிறது....அவர்களுக்கும் கேட்குமா?