தெலுங்கானா, காஷ்மீர் குறித்து சர்ச்சைப் பேச்சு.. சந்திரசேகர ராவ் மகள் கவிதா மீது தேசதுரோக வழக்கு
ஹைதராபாத்: தெலுங்கானாவும், காஷ்மீரும் ஒருபோதும் இந்தியாவின் பகுதிகளாக இருந்தவை அல்ல என்று சர்ச்சைக்கிடமான முறையில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பியுமான கவிதா மீது போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டும் பாய்ந்துள்ளது.
முன்னதாக பாஜகவின் ஹைதராபாத் நகர வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கருணா சாகர், கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில், நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும், நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையிலும் கவிதா பேசியுள்ளார். எனவே அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த 7வது கூடுதல் தலைமைப் பெருநகர நீதிபதி நிஜாமுதீன், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதன்னப்பேட்டை போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தற்போது போலீஸார், கவிதா மீது தேச துரோகக் குற்றச்சாட்டு உள்ளி்ட்ட 2 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்ன பேசினார் கவிதா?
முன்னதாக கவிதா அளித்த ஒரு பேட்டியில் இந்தியாவின் எல்லையை மறு வரையறை செய்ய வேண்டும். குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் எல்லையை மறு வரையறை செய்ய வேண்டும்.

காஷ்மீர் நம்முடையதல்ல
காஷ்மீர் நம்முடைய பகுதியே அல்ல. அது நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியும் அல்ல.

தெலுங்கானாவும் இந்தியாவில் இருந்ததில்லை
அதேபோல தெலுங்கானாவும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. காஷ்மீர், தெலுங்கானா இரண்டையும் சுதந்திரத்திற்குப் பின்னர் வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைத்து விட்டனர் என்று கூறியிருந்தார் கவிதா.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
கவிதாவின் இந்தக் கருத்துக்கு, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. கவிதா மீது வழக்குத் தொடர அவை வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில்தான் அவர் மீது கோர்ட் உத்தரவுப்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications