மே. வங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து: 3 அதிகாரிகள் பலி!
மேற்குவங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயரதிகள் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் சுக்னாவில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் உயர் அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
சுக்னா என்ற இடத்தில் இந்திய ராணுவ அதிகாரிகள் 4 பேருடன் சென்ற சீட்டா ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய அதிகாரியை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
5 இருக்கைகளை கொண்ட இந்த சீட்டா வகை ஹெலிக்காப்டர் அதிக ஈர்ப்பு விசை உள்ள இடங்களிலும் அதிக உயரத்திலும் பறக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்ததாக ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.