பிரிட்டன் வாக்கெடுப்பால் ஏற்படும் தாக்கங்களை சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது: அருண்ஜேட்லி
டெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் ஏற்படும் தாக்கங்களை சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் ஆதரவு அளித்துள்ளனர். இந்த முடிவானது சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வெளியிட்ட அறிக்கை விவரம்:
பிரிட்டன் வாக்கெடுப்பானது உலகப் பொருளாதாரத்தில் நீடித்து வரும் நிச்சயமற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும். உலக நாடுகள் அனைத்துமே இந்த முடிவால் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டமைப்பைப் பாதுகாக்க உறுதியுடன் இருக்கிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் சரியாக இருக்கின்றன. நிதிச் செலவு கட்டுப்பாடு மற்றும் குறைந்து வரும் பணவீக்கம் ஆகியவகளால் இந்தியப் பொருளாதாரத்தில் பிரச்சனைகள் இல்லை.
இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இந்த விஷயத்தால் ஏற்படக்கூடிய எந்த ஒரு குறுகிய கால தாக்கத்தையும் சமாளிக்க தயாராகவே இருக்கிறோம்.
இவ்வாறு அருண்ஜேட்லி கூறியுள்ளார்.