"அரைவேக்காடுக்கும் கொலைகாரனுக்கும் இடையே மாட்டிய இந்தியா".. 'ரீ-ட்வீட்' சர்ச்சையில் கேஜ்ரிவால்
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எப்போதும் சர்ச்சைகளின் சங்கமாகத்தான் இருக்கிறார். இப்போது ட்விட்டரில் அவரது ஆதரவாளர் ஒருவர் ராகுல் காந்தியையும் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்த பதிவை ரீ ட்வீட் செய்து சிக்கலில் சிக்கியிருக்கிறார்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டி குறித்து ட்விட்டரில் ஏராளமான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
ரீ ட்விட் செய்த கேஜ்ரிவால்
இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இசை அமைப்பாளர் விஷால் தத்லானியின் ட்விட்டர் பதிவை ரீ ட்விட் செய்துள்ளார்.
"அரைவேக்காடு- ராகுல்; கொலைகார மோடி"
அந்த ட்விட்டர் பதிவில், ஒரு அரைவேக்காடுக்கும் (ராகுல் காந்தி) ஒரு கொலைகாரனுக்கும் (நரேந்திர மோடி) இடையே இந்தியா சிக்கிக் கொண்டிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
விஷால் தத்லானி
இந்த ட்விட்டர் பதிவை வெளியிட்ட இசை அமைப்பாளர் விஷால் தத்லானி, ஆம் ஆத்மியின் தீவிர ஆதரவாளர்.
ரீ ட்விட் செய்யலாமா?
தத்லானியின் ட்விட்டர் பதிவை அரவிந்த் கேஜ்ரிவால் எப்படி ரீ ட்விட் செய்யலாம் என்று காங்கிரஸ், பாஜக கட்சிகள் கொந்தளித்திருக்கின்றன.
கேஜ்ரிவாலுக்கு வார்னிங்
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் நிர்மலா சீதாராமன், இதுபோன்ற சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுகளுக்கு அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்று கேஜ்ரிவாலை எச்சரித்திருக்கிறார்.
எத்தனை எத்தனை சர்ச்சைகள்
டெல்லி முதல்வரானது முதல் நாள்தோறும் சர்ச்சைகளைத்தான் கேஜ்ரிவால் எதிர்கொண்டு வருகிறார். சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி மீது தொடரும் புகார்கள், டெல்லியில் அதிரடியாக நடத்திய தர்ணா இவற்றுக்கெல்லாம் மேலாக கட்சி எம்.எல்.ஏவே கலகக் குரல் எழுப்பியது போக இப்போது புது சர்ச்சையில் கேஜ்ரிவால்..