தமிழகத்தின் முகுந்த் வரதராஜனுக்கு உயரிய “அசோக் சக்ரா விருது” – மனைவி இந்து பெற்றுக் கொண்டார்!
டெல்லி: இந்தியாவின் 66ஆவது குடியரசுத் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று நடந்த கண்கவர் நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் நாயக் நீரஜ் குமார் ஆகியோருக்கு ராணுவத்தின் உயரிய விருதான "அசோக் சக்ரா" குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
மறைவுக்குப் பின்னர் இந்த இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இருவரும் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் தீரமாக போரிட்டு வீரமரணம் அடைந்தவர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் 2 தீவிரவாதிகளை உயிரிழப்பதற்கு முன்பு சுட்டு வீழ்த்தினார் முகுந்த் வரதராஜன். குப்வாரா மாவட்டத்தில் உள்ல கலரூஸ் வனப்பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடந்த மோதலின்போது ஒரு தீவிரவாதக் குழுவை வழிமறித்து தீரத்துடன் சண்டையிட்டார் தீரஜ் சிங். அப்போது நான்கு தீவிரவாதிகளை அவர் சுட்டு வீழ்த்தினார்.
வீரமரணமடைந்த இவ்வீரர்களின் சார்பில் அசோக் சக்ரா விருதானது அவர்களுடைய மனைவிகளிடம் வழங்கப்பட்டது. மேஜர் முகுந்த் வரதராஜனின் சார்பில் அவருடைய மனைவி இந்து வரதராஜனும், நீரஜ் சார்பில் அவருடைய மனைவியும் இந்த உயரிய விருதினைப் பெற்றுக் கொண்டனர்.