மிஸ்டர் ராகுல்...குவாத்ரோச்சியிடம் வாங்கிய பணம் பற்றி சோனியாவிடம் கேளுங்க..: சுஷ்மா 'பொளேர்'
டெல்லி: லலித் மோடியிடம் வாங்கிய பணம் பற்றி தெரிவித்தால்தான் நாடாளுமன்றத்தை நடத்த விடுவோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு லோக்சபாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடும் பதிலடி கொடுத்துள்ளார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட குவாத்ரோச்சியிடம் உங்கள் தாயார் சோனியா எவ்வளவு பணம் வாங்கினார் என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என சுஷ்மா கூறியுள்ளார்.
லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் பற்றி லோக்சபாவில் காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விவாதத்தைத் தொடங்கி வைத்து பேசிய பிறகு சுஷ்மா ஸ்வராஜ் மிக காட்டமாக பேசினார்.
அப்போது ராகுல் காந்தியை விமர்சித்து சுஷ்மா பேசியதாவது:
நான் 38 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறேன். மிகவும் கண்ணியத்துடன் அரசியலில் இருந்து வருகிறேன்.
நீங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் லலித் மோடி இங்கிலாந்தில் வசிப்பதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார். அப்படி இருக்கும்போது என்னிடம் ஏன் கேள்விகளைக் கேட்க வேண்டும்?
பிளவுபட்டது காங்கிரஸ்
என்னை நோக்கி எழுப்புகிற கேள்விகளுக்கு அந்த கேள்வியை எழுப்புகிறவர்களே பொறுப்பு... காங்கிரஸ் கட்சி லலித் மோடி விவகாரத்தில் 2 ஆக பிளவுபட்டு நிற்கிறது.. ஒருதரப்பு லலித் மோடி விவகாரத்தில் விசாரிக்க சொல்கிறது..மற்றொரு தரப்பு வேண்டாம் என்கிறது...
ஆண்டர்சனை தப்பவிட்டது யாரு?
நீங்கள் ஆட்சியில் இருந்த போது அமலாக்கப் பிரிவு உங்கள் வசம்தானே இருந்தது? ஏன் நீங்கள் அப்போது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை?
ராஜிவ்காந்தியின் இளம்பிராயத் தோழர் அதில் ஷார்யார் 35 ஆண்டுகாலம் சிறையில் இருக்கிறார்.. ஆனால் போபால் விஷவாயு வழக்கின் குற்றவாளி ஆண்டர்சனை தப்பிக்கவிட்டவர் ராஜிவ்.
உங்க தாயாரிடம் கேளுங்க..
ஓய்வுக்காக வெளிநாடு போகிற ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை நன்கு படித்துவிட்டு திரும்ப வேண்டும்.. அப்படி திரும்பி வரும்போது சோனியாவிடம், அம்மா..குவாத்ரோச்சியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? என கேட்க வேண்டும்.
என்ன திருட்டுதனம்?
திருடர்கள்தான் ரகசியமாக சில வேலைகளை செய்வார்கள் என்று ராகுல் காந்தி கூறுகிறார்கள்.. நான் அப்படி என்ன ரகசியமாக செய்துவிட்டேன்? போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் குற்றவாளி குவாத்ரோச்சியை ராஜிவ் ரகசியமாக தப்பவிட்டதைப் போலவா நான் செய்துவிட்டேன்?
இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.