அஸ்ஸாம்: TET ஆசிரியர் தேர்வு 2 ஆண்டுக்கு ரத்து! மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு CTET- பாஸ் இனி தகுதியா?
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனி அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET நடத்தப் போவது இல்லை என அறிவித்துள்ளது அம்மாநில அரசு. இந்த 2 ஆண்டுகளில் ஏற்கனவே CTET எனப்படும் மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அரசு ஆசிரியர் பணி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளதால் அம்மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனங்களை சீனியாரிட்டி அடிப்படையில் மறைந்த முதல்வர் கருணாநிதி நியமித்தார். இதனால் பல்லாயிரக்கணக்கான கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆசிரியர் படிப்பு படித்தவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களாகினர்.
அதன்பின்னர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் - (TET டெட்) தேர்ச்சி பெற்றாக வேண்டும் என மத்திய அரசு திணித்தது. அதாவது பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிவதற்குத் தேவையான அத்தியாவசிய தகுதிகளுள் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மாநில அரசுகளால் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் நாள் முதல் 7 ஆண்டுகளுக்கு இதற்கான சான்றிதழ் செல்லுபடியாகும் என அறிவித்தது. பின்னர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுட் காலம் முழுவதும் செல்லுபடியாகும் என திருத்தம் செய்தது மத்திய அரசு.
டெட் தேர்வுகள் என்பது மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுகிறவர்கள் இடைநிலை ஆசிரியராக (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆசிரியர்களாக) பணிபுரியலாம். 2-வது தாள் எழுதி தேர்வு பெறுகிறவர்கள், பட்டதாரி ஆசிரியராகலாம் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை). தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த டெட் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுதான் டெட் தேர்வு. அனைத்து மாநில அரசுகளும் இந்த டெட் தேர்வு முறையை பின்பற்றி வருகிறது.
இந்த டெட் அல்லாமல் CTET என்கிற ஒரு தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த CTET தேர்வை மத்திய அரசின் சிபிஎஸ்சி நடத்துகிறது. மத்திய அரசு தொடர்புடைய கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்குதான் இந்த CTET தேர்வு நடத்தப்படுகிறது.
தற்போது அஸ்ஸாமில் ஆளும் பாஜக அரசு திடீரென, இனி 2 ஆண்டுகளுக்கு டெட் தேர்வு நடத்தப் போவது இல்லை என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு கூறுகையில், அஸ்ஸாமில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு TET தேர்வு நடத்தப் போவது இல்லை. இந்த 2 ஆண்டுகளில் மாநில அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர் தேவை எனில் CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பாஸானவர்களை கொண்டு நிரப்புவோம் என்றார்.
இதனால் அஸ்ஸாம் மாநிலத்தில் TET தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு ஆசிரியர் பணி கிடைக்கும் என காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து போயுள்ளனர். அஸ்ஸாம் மாநில அரசின் இந்த முடிவுக்கு அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அஸ்ஸாமில் ஆளும் பாஜக அரசு இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
வந்தாச்சு அறிவிப்பு! ஆசிரியர் தகுதி தேர்வு- டெட் 2-ம் தாள் தேர்வுகள் ஜன.31 முதல் பிப்.12 வரை!