அப்துல் கலாமுக்காக சோகத்தில் மூழ்கிய தேசம்... பெண்களுடன் டான்ஸ் ஆடிய அஸ்ஸாம் முதல்வர்
குவஹாத்தி: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்காக நாடே சோகத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில் பெண்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய்.
இத்தனைக்கும் இவர் கலாம் மீது அதிக பற்று கொண்டவர். கலாமும் இவரை பலமுறை பாராட்டியுள்ளார். இருவருக்கும் இடையே நல்ல தோழமையும் கூட உண்டு. அப்படிப்பட்ட கோகாய் இப்படி டான்ஸ் ஆடி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
Golaghat(29/7/15): Nation mourns #DrKalam, Assam CM Tarun Gogoi dances... https://t.co/9RjlanmSLb
— ANI (@ANI_news) July 30, 2015
கோலகாட் மாவட்டத்தில் தேயிலைத் தோட்ட பெண் ஊழியர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார் கோகாய்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பெண் ஊழியர்கள் இருவருடன் சேர்ந்து நடனமாடினார் கோகாய். அந்தப் பெண்கள் பாட்டுப் போட இவர் கூட சேர்ந்து ஆடினார்.
இது அஸ்ஸாமில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மாநில பாஜக தலைவர் சித்தார்த்த பட்டச்சார்யா இதுகுறித்துக் கூறுகையில், சனிக்கிழமைதான் கோகாயின் நெருங்கிய நண்பரும், முன்னால் அமைச்சருமான பி.கே.ஹண்டிக் மரணமடைந்தார். மேலும் திங்கள்கிழமை நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணமடைந்தார். ஆனால் இங்கு ஒரு முதலமைச்சர் பெண்களுடன் நடனமாடியும், கோல்ப் ஆடியும் பொழுதைக் கழிக்கிறார் என்று சாடியிருந்தார்.
இந்த நிலையில் தனது செயலுக்கு கோகாய் வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டான்ஸ் ஆடியது தவறுதான். அதை நான் செய்திருக்கக் கூடாது. அப்துல் கலாம மறைவுக்காக நாடு துயரத்தில் மூழ்கியிருக்கும்போது நான் இதைச் செய்திருக்கக் கூடாது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.