சட்டசபை தேர்தல்: கடும் எதிர்ப்புக்கிடையே பாஜகவுடன் அஸ்ஸாம் கண பரிஷத் கூட்டணி
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாடன் அஸ்ஸாம் கன பரிஷத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அஸ்ஸாம் கன பரிஷத் கட்சியில் இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுடன் அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா, புதுவை ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களும் நடைபெற உள்ளது. அஸ்ஸாமில் மொத்தம் 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இங்கு கடந்த 15 ஆண்டுகாலமாக காங்கிரஸ்தான் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. முதல்வராக தருண் கோகய் பதவி வகித்து வருகிறார். 2001, 2006 ஆகிய சட்டசபை தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சியாக அஸ்ஸாம் கண பரிஷத் இருந்தது. ஆனால் 2011 தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை அஸ்ஸாம் கன பரிஷத் இழக்க ஏஐயூடிஎப் என்கிற அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி பெற்றது.
இம்மாநிலத்தில் இஸ்லாமியர்கள் 34% பேர் இருக்கின்றனர். மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் இஸ்லாமியர்களே பெரும்பான்மையினர். இவர்கள் வாக்குகளும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸுக்கு கிடைத்து வந்ததால் அக்கட்சியால் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடிந்தது.
இங்கு எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி மிகத் தீவிரம் காட்டி வந்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் பாஜக பக்கம் வளைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது அஸ்ஸாம் கண பரிஷத் கட்சியையும் கூட்டணியில் சேர்த்துள்ளது பாஜக.
1985, 1990 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் மாநிலத்தில் ஆளும் கட்சியாக திகழ்ந்தது அஸ்ஸாம் கண பரிஷத். இந்த அஸ்ஸாம் கண பரிஷத் தலைவர் பிரபுல்லகுமார் மகந்தா நேற்று அறிவித்தார். இருந்த போதும் அஸ்ஸாம் கண பரிஷத் கட்சியிலேயே பாஜகவுடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.