தேர்தல் வியூகம்: 'அனுபவசாலி' கர்நாடக பாஜக நிர்வாகிகளிடம் பாடம் கற்ற தமிழக நிர்வாகிகள்
பெங்களூர்: தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து கர்நாடக பாஜகவினருடன் தமிழக பாஜக நிர்வாகிகள் பெங்களூரில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தென் இந்தியாவில் பாஜக ஆட்சி முதல் முறையாக அமைந்தது கர்நாடகாவில்தான். எனவே அக்கட்சி அம்மாநிலத்தில் பலமானதாக உள்ளது.
கர்நாடக பாஜகவினரின் அனுபவங்களையும், தேர்தல் கள பணிகளையும் பற்றி அறிந்து கொண்டு அதை தமிழக சட்டசபை தேர்தலில் செயல்படுத்த தமிழக பாஜக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
பாஜக அலுவலகம்
இதுகுறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூர், மல்லேஸ்வரத்திலுள்ள கர்நாடக மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு, கர்நாடக மாநில பாஜக தலைவரும் எம்.பியுமான பிரகலாத் ஜோஷி, தலைமைவகித்தார்.
முக்கிய நிர்வாகிகள்
தமிழக மேலிட பொறுப்பாளரும், சிக்மகளூர் தொகுதி எம்.எல்.ஏவுமான சி.டி.ரவி, கர்நாடக மாநில பாஜக பொதுச்செயலாளர் நிர்மல்குமார் சுரானா, தமிழக பாஜக பொதுச்செயலாளர் மோகன் ராஜுலு, பெங்களூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பத்மநாப ரெட்டி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.
வியூகம்
பெங்களூர், கோலார் தங்கவயல் பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கருத்துக்களை எடுத்துக்கூறினர். பிரச்சாரத்திற்கு யாரையெல்லாம் களமிறக்குவது, எங்கெல்லாம் பிரச்சாரம் செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாற்று அரசியல்
கூட்டத்தில் மோகன்ராஜுலு பேசியதாவது: 1967ம் ஆண்டு காங்கிரசுக்கு மாற்றாக திராவிட முன்னேற்ற கழகம் முன்னிறுத்தப்பட்டு வெற்றி பெற்றது. அதைப்போன்ற சூழ்நிலைதான் தற்போது தமிழகத்திலுள்ளது. இப்போதும் மக்கள் மாற்றத்தைத்தான் விரும்புகிறார்கள்.
வெறுப்பு
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்து மக்களின் அதிருப்தியை வெகுவாக சம்பாதித்துள்ளன. எனவே, இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு கட்சியை தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள்.
மோடிக்கு முன்னிலை
மாற்றத்தை தருவோம் எனக்கூறிக்கொண்டு பல கட்சிகளும் போட்டியில் குவித்துள்ளதால் மக்கள் குழப்பத்திலுள்ளனர். பாஜகவால் மட்டுமே நல்லாட்சியை தர முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். நரேந்திர மோடி மத்தியில் எப்படி ஒரு ஊழலற்ற ஆட்சியை நடத்துகிறாரோ, அப்படி தமிழகத்தில் ஆட்சி நடத்தும் வல்லமை பாஜகவுக்கு மட்டுமே உள்ளது என்பதை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்.
நல்ல வாக்குகள்
கடந்த மக்களவை தேர்தலின்போது பாஜக கூட்டணிக்கு 19 சதவீத வாக்குகல் கிடைத்தது. எனவே சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தோ, அல்லது தனித்தோ 234 தொகுதிகளிலும் போட்டியிட பாஜக தயாராக உள்ளது என்றார்.