அடுத்து ஆற அமர சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டே தாக்க ஆரம்பிப்பார்கள் போல தீவிரவாதிகள்!!
டெல்லி: பதன்கோட்டில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது இந்தியப் படையினருடன் மோதி இறந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கையோடு ஏகப்பட்ட ஐட்டங்களைக் கொண்டு வந்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெயின் கில்லர் மாத்திரைகளையும் அவர்கள் வைத்திருந்துள்ளனர்.
முன்பெல்லாம் தாக்குதலுக்குப் போகும் தீவிரவாதிகள் ஆயுதங்குடன் மட்டுமே செல்வது வழக்கம். ஆனால் இப்போது எல்லா வகையிலும் அவர்கள் தயாராகவே கிளம்பி வருகிறார்கள்.
மாத்திரை மருந்துகளையும் அவர்கள் கூடவே எடுத்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பதன்கோட் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் கூட கையோடு பெயின் கில்லர் மாத்திரைகளைக் கொண்டு வந்துள்ளனர்.
மெபனெமிக் ஆசிட்
பதன்கோட் தீவிரவாதிகள் தங்களுடன் 500 மில்லி கிராம் மெபனெமிக் ஆசிட்டையும் கூடவே கொண்டு வந்துள்ளனர். இதன் வர்த்தகப் பெயர் போன்ஸ்டான் என்பதாகும். இது பெயின் கில்லர்.
விமானப்படைத் தளத்தில் கண்டுபிடிப்பு
விமானப் படைத் தளத்தில் தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் நடத்தியபோது இந்த மாத்திரைகள் அடங்கிய பாக்கெட்கள் சிக்கின. இவை தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது.
தீவிரவாதிகளின் விருப்பத்துக்குரிய பெயின் கில்லர்
இந்த பெயின் கில்லர்தான் தீவிரவாதிகளுக்கு மிகவும் பிடிக்குமாம். தாக்குதலின்போது இதைப் போட்டுக் கொள்வார்களாம். வலி தெரியாமல் இருக்குமாம்.
பாகிஸ்தான் தயாரிப்பு மாத்திரை
பதன்கோட் தளத்தில் சிக்கிய மாத்திரைகளை பாகிஸ்தானில் உள்ள பிசர் நிறுவனம் தயாரித்தது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு ஆலை கராச்சியில் உள்ளது.
ஏகப்பட்ட சாமான்களுடன்
வெறும் துப்பாக்கியுடன் மட்டும் வராமல், பெயின் கில்லர்கள், சிரிஞ்சுகள், சத்து பானங்கள், உணவு, குடிநீர் என சகலத்தையும் தூக்கி வந்துள்ளனர் இந்த எமகாதரர்கள்.
பாகிஸ்தான் சிக்கியதே இதனால்தான்
இவர்கள் கொண்டு வந்திருந்த மருந்துகள், சிரிஞ்சுகளில் உள்ள முகவரிகள் அனைத்தும் பாகிஸ்தான் முகவரிகள். இதனால்தான் வந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள் என்பது உடனடியாகத் தெரிய வந்துள்ளது.
மெபனெமிக் ஆசிட் எதற்குப் பயன்படும்?
வழக்கமாக சாதாரண உடல் வலி மற்றும் மாதவிடாய் சமயத்தில் வரும் வலியின்போது இந்த மெபனெமிக் ஆசிட் மாத்திரை கை கொடுக்கும். ஆனால் இதில் பக்கவிளைவு அதிகம் என்பதால் அதிகம் பரிந்துரைப்பதில்லையாம். இருப்பினும் வலியை சட்டென குறைக்கும் தன்மை கொண்டது என்பதால் தாக்குதல் சமயத்தில் தீவிரவாதிகள் இதை அதிகம் பயன்படுத்துகிறார்களாம்.
ரொம்பத் தெளிவாய்ட்டாங்கப்பா தீவிரவாதிகள். அடுத்து ஆற அமர சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டே தாக்க ஆரம்பிப்பார்கள் போல.