3வது அணி உருவாக்கும் மமதா முயற்சிக்கு சோனியாகாந்தி முட்டுக்கட்டை! 20 கட்சி விருந்தின் பின்னணி
டெல்லி: திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், நேற்று இரவு விருந்தளித்து உபசரித்தார்.
லோக்சபா தேர்தல்களுக்கு ஓராண்டே உள்ள நிலையில், சோனியாகாந்தி அளித்த விருந்தில் 20 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றது பாஜகவினரை உற்று கவனிக்க வைத்தது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி கனிமொழி பங்கேற்றார்.
பங்கேற்றவர்கள்
விருந்து நிகழ்ச்சியில் திமுக சார்பில், ராஜ்யசபா எம்.பி. கனிமொழி பங்கேற்றார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பந்தோபாத்யாய, சமாஜ்வாதி சார்பில் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் சந்திர மிஸ்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், முகமது சலீம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் சார்பில் அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் மகள் மிஸா பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
சிறு கட்சிகளும்
இதேபோல ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டி, ஜார்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹேமந்த் சோரன், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மாஞ்சி, ராஷ்டிரிய லோக்தள் தலைவர் அஜித் சிங், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, ஹிந்துஸ்தான் பழங்குடியினர் கட்சித் தலைவர் சரத் யாதவ், ஏஐயூடிஎஃப் கட்சித் தலைவர் பத்ருதீன் அஜ்மல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தெலுங்கு தேசத்திற்கு அழைப்பில்லை
விருந்து ஏற்பாடு செய்திருந்த காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சி தேசிய தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, ஏ.கே.அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர்.
பாஜகவுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு முட்டி, மோதிக்கொண்டுள்ளபோதிலும், தெலுங்கு தேசம் கட்சிக்கு விருந்துக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை. பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளுக்கும் இந்த விருந்திற்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.
மமதா முயற்சி
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலையொட்டி, கூட்டணி அமைக்க வசதியாக, எதிர்க்கட்சிகளிடயே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்தில் சோனியாகாந்தி இந்த விருந்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் பலவீனமாக காட்சியளிப்பதால், அதை தாண்டி மூன்றாவது அணியொன்றை தனது கட்சி தலைமையில் அணைக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி முயல்கிறார். பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடனும் அவர் பேசினார். இந்த நிலையில், திமுக சார்பில், சோனியாகாந்தி அளித்த விருந்தில் கனிமொழி பங்கேற்றுள்ளார். மேலும், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பந்தோபாத்யாயவும் பங்கேற்றுள்ளார்.
அரசியல் இல்லையாம்
ஆனால், இதை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா மறுத்துள்ளார். அரசியலுக்காக இந்த விருந்து நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகளிடையே நட்புறவை ஏற்படுத்தவே விருந்து நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார். நாடு பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு, நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வெளியே கொண்டுசெல்லப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஒரு குடும்பம் போல் அமர்ந்து விவாதிக்கவே இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என அவர் தெரிவித்தார்.