இப்படியா விளம்பரம் தேடுவது?... பலாத்காரத்துக்குள்ளான பெண்ணை அவமதித்த அமைச்சர்!
லக்னோ: பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு தன்னிடம் நிவாரணம் தேடி பார்க்க முயன்ற பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசி உ.பி. அமைச்சர் அஸம்கான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஏற்கனவே இதுபோல பல சர்ச்சைகளில் அவர் சிக்கியுள்ளார். இந்த நிலையில் பாலியல் பலாத்கார பாதிப்புக்குள்ளான பெண் குறித்து அஸம்கான் இப்படிப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார் அஸம்கான். வியாழக்கிழமை நடந்த கங்கா கி புகார் என்ற நிகழ்ச்சியின்போது பொது இடத்தில் இப்படிப் பேசி அந்தப் பெண்ணை பெரும் தர்மசங்கடத்துக்குள்ளாக்கினார் அஸம் கான்.
யாருமே உதவவில்லை
இதுகுறித்து அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் கூறுகையில், எங்களது பிரச்சினைக்கு யாருமே உதவ முன்வரவில்லை. அமைச்சரை தொடர்ந்து சந்திக்க முயன்றோம். ஆனால் கடைசி வரை யாருமே அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை.
தடுத்த போலீஸ்
நாங்கள் அமைச்சரவை பார்த்து விடக் கூடாது என்பதில் போலீஸார் ரொம்பத் தீவிரமாக இருந்தனர். முட்டுக்கட்டையாக இருந்தனர். இதனால் கடைசி வரை எங்களால் அமைச்சரைப் பார்க்க முடியவில்லை.
ஜூலையில் நடந்த சம்பவம்
கடந்த ஜூலை மாதம் இப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். வழக்கு ஜூலை27ம் தேதி பதிவு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை நிவாரணம் கிடைக்கவில்லை.
அஸம்கானை சந்திக்க முயற்சி
இந்த சம்பவத்தில் தனக்கு நீதி வேண்டும் என்று கோரி அஸம்கானை சந்திக்க இப்பெண் தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆனால் அவரைச் சந்திக்க முடியவில்லை.
அஸம்கானின் விஷமப் பேச்சு
ஒருபக்கம் இப்பெண் அமைச்சரை சந்திக்க முயன்ற சமயத்தில், மறுபக்கம் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தார் அமைச்சர். அப்போது இப்பெண் குறித்து அவர் கூறியதுதான் சர்ச்சையாகி விட்டது.
விளம்பரம் தேடி விட்டார்
அவர் பேசுகையில், நிச்சயம் இது கவலைக்குரிய விஷயம்தான். இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிடுகிறேன். ஆனால் பாருங்கள், இப்போது அந்தப் பெண்ணுக்கு நல்ல விளம்பரம் கிடைத்து விட்டது. அவருக்கு நடந்ததை விட இது மோசமானது. இப்படி போகிற இடமெல்லாம் தனக்கு நடந்ததைக் கூறி அவர் விளம்பரம் தேடினால் அவரால் எப்படி வெளியில் தலை காட்ட முடியும் என்றார் அஸம்கான்.
பாஜக கண்டனம்
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஒட்டுமொத்த பெண் குலத்தையும் இழிவுபடுத்தி விட்டதாக அவர் கூறியுள்ளார்.