ஜெயலலிதா சிறையில் இருப்பதால் 'சந்தோஷப்படும்' பெங்களூர் பெட்டிக்கடைக்காரர்!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கடந்த சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, பெங்களூர் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ள பரப்பன அக்ரஹாராவில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். ஜெயலிலதா சிறையில் அடைக்கப்பட்டதால் அவரை பார்க்க அமைச்சர்கள், பல்வேறு விஐபிகள், நடிகர், நடிகைகள் பெங்களூர் சிறைக்கு படையெடுத்தனர். ஆயினும் இதுவரை ஜெயலலிதா யாரையும் சந்திக்கவில்லை.
மேலும், தொண்டர்கள் பலரும் சிறைக்கு வெளியே அழுதபடி உட்கார்ந்திருந்தனர். அவர்களை கலைக்க போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனால் சிறையை சுற்றியுள்ள பகுதி ஜே, ஜே என்று சந்தைக்கடை போல காட்சியளித்தது.
இந்த பரபரப்புக்கு மத்தியிலும் ஒருவருக்கு மட்டும் இதனால் ஆதாயம் கிடைத்துள்ளது. அவர் வேறுயாருமல்ல சிறைக்கு வெளியே பெட்டிக் கடை வைத்திருக்கும் நபர்தான். ஜெயலலிதாவை காண வந்துள்ள மற்றும் போராட்டம் நடந்த வந்துள்ள தொண்டர்கள் பீடி, சிகரெட், பாக்கு, குடிநீர் பாட்டில், வாழைப்பழம் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டுக்கொண்டுள்ளனர்.
இதனால் அந்த பெட்டிக்கடையில், வியாபாரம் களைகட்டி, வியாபாரியின் கல்லாவும் நன்கு கட்டியுள்ளதாம். இதுகுறித்து அந்த பெட்டிக்கடைக்காரர் கூறுகையில், தினமும் சுமார் ரூ.1000க்கு வியாபாரம் நடைபெற்றுவந்த நிலையில், ஜெயலலிதா சிறைக்குள் வந்த பிறகு வியாபாரம் ரூ.10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. ஜெயலலிதா எதற்காக சிறையில் உள்ளார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் வியாபாரம் பெருகியதால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.