ப்ரைம் டைமில் நோ கன்னட சினிமா! சிஎம் சொல்லியும் கேட்காத பெங்களூர் மல்டிபிளக்ஸ் தியேட்டர் அதிபர்கள்!!
பெங்களூர்: பெங்களூருவில் திரையரங்குகளில் கன்னட படங்களை திரையிட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கேட்டுக் கொண்டதை மல்டிபிளக்ஸ் தரப்பு ஏற்க மறுத்துவிட்டது.
பெங்களூருவில் ‘மல்டிபிளக்ஸ்‘ திரையரங்குகளில் கன்னட சினிமாக்களை, மக்கள் அதிகம் வரும் நேரங்களில், திரையிடுவதில்லை என்பது கன்னட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் புகாராகும்.
இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க முதல்வர் சித்தராமையா தலைமையில், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ரோஷன் பெய்க் மற்றும் மூத்த அமைச்சர்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் முதல்வரின் அலுவலக இல்லமான ‘கிருஷ்ணா‘வில் நடைபெற்றது.
முதல்வர் கோரிக்கை
இந்த கூட்டத்தில் சித்தராமையா கூறுகையில் "பெங்களூருவில் எந்த சூழ்நிலை வந்தாலும் கன்னட திரைப்படங்களை திரையிட முன்னுரிமை அளிக்க வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள் காரணம் எதுவும் சொல்லாமல், கன்னட திரைத்துறை வளர்ச்சிக்கு உதவ வேண்டும். எதுவாக இருந்தாலும் முக்கியமான நேரங்களில் கன்னட சினிமாவை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும். டிக்கெட் கட்டணம், தின்பண்டங்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும். கடந்த பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புப்படி 300 திரையரங்குகள் கட்டும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்" என்று சித்தராமையா பேசினார்.
கன்னட படம் ஓடுவதில்லை
‘மல்டிபிளக்ஸ்‘ திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பு பேசும்போது "அதிக செலவு செய்து திரையரங்குகளை கட்டி உள்ளோம். கன்னட படங்களை மட்டும் வெளியிட்டால் அவை சரியாக ஓடுவது இல்லை என்றும், இதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உண்டாகிறது" என்றும் தெரிவித்தனர்.
தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு
இதை கன்னட திரைத்துறை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்தனர். தியேட்டர் உரிமையாளர்கள் அரசை ஏமாற்றி வரி விலக்கு பெறுகிறார்கள். கன்னட படங்களுக்கு வரிச்சலுகை கிடைப்பதால், திரையரங்குக்கு வெளியே கன்னட போஸ்டர்களை ஒட்டிவிட்டு உள்ளே வேறு மொழி படங்களை திரையிட்டு அதிகளவில் வரி விலக்கு பெறுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.
பேச்சுவார்த்தை தோல்வி
பேச்சுவார்த்தையின் இறுதியில், சித்தராமையாவின் வேண்டுகோளை ஏற்க இயலாது என்று கூறி திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். இதையடுத்து அமைச்சர் ரோஷன் பெய்க் தலைமையில் மீண்டும் ஒரு முறை கூட்டம் நடத்தி இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும்படி சித்தராமையா உத்தரவிட்டார்.