பாஜகவுக்கு மலைபோல் உதவிய “ஜாதி”.. குஜராத்தில் மீண்டும் முதலமைச்சராகும் பட்டேல்! பதவியேற்பு எப்போது?
காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கும் நிலையில் பூபேந்திர பட்டேலையே மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்துள்ளது பாஜக. தற்போது சட்டமன்ற குழு தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் பூபேந்திர பட்டேல் தலைமையிலான அரசின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதி 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக 27 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் இருந்து வந்த நிலையில் இம்முறை எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்போடு போட்டியிட்டது.
நட்டா கோட்டையில் “பவர்” போன பாஜக.. இமாச்சல் முதல்வராகும் காங்கிரஸ்காரர்! யார் இந்த சுக்விந்தர் சிங்?
பாஜக பெரும் வெற்றி
பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக 156 தொகுதிகளில் சாதனை வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் அக்கட்சி பெரும்பான்மை பலத்தோடு குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது.
ராஜினாமா கடிதம்
பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பாட்டில், தலைமை கொறடா பங்கஜ் தேசாய் உள்ளிட்டோர் காந்திநகரில் ஆளுநர் ஆச்சாரியா தேவாவிரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து முந்தைய அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அடுத்த முதலமைச்சர்
இதனை தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று அக்கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் பாஜகவின் சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் குஜராத் மாநில முதலமைச்சராக 2 வது முறை பூபேந்திர பட்டேல் தேர்வாவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
பதவியேற்பு விழா
பூபேந்திர பாட்டில் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் வரும் 12 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளார்கள். குஜராத்தில் பாஜகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக பட்டேல் வாக்குகள் அமைந்ததால் பூபேந்திர பட்டேலுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
அமித்ஷா கொடுத்த உறுதி
பூபேந்திர பட்டேலே பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் என பிரச்சாரத்தின்போதே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருக்கிறார். "குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் தற்போதைய முதலமைச்சர் பூபேந்திர பட்டேலே முதலமைச்சராக இருப்பார்." என்றார்.
பட்டேல் ஓட்டு
குஜராத் முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி ராஜினாமா செய்ததை தொடர்ந்து பூபேந்திர பட்டேல் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்றார். குஜராத்தில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் பட்டேல் சாதியினர் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக மீது கொண்ட அதிருப்தியால் பட்டேல் சமுதாயத்தின் வாக்கு கிடைக்காமல் அக்கட்சி 99 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆனால், பூபேந்திர பட்டேல் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதுடன், ஹர்திக் பட்டேல் பாஜகவில் இணைந்தது அக்கட்சி இம்முறை பெற்ற பெரும் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.