பீகார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்லர் ஜிதன்ராம் அரசு வெற்றி! லாலு கட்சி ஆதரித்தது!!
பாட்னா: பீகார் சட்டசபையில் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.
லோக்சபா தேர்தலில் பீகாரில் பாரதிய ஜனதா கட்சி 22 இடங்களைக் கைப்பற்றியது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 இடங்களையும், ஜக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தலா 2 இடங்களையும் கைப்பற்றின.
இதையடுத்து, முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார். பின்னர், அவரது ஆதரவுடன் ஜிதன் ராம் மஞ்சியை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.மொத்தம் 239 உறுப்பினர்களை கொண்ட பீகார் மாநில சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 122. ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு இருப்பது 117 எம்.எல்.ஏ.க்கள் . மேலும் 2 சுயேட்சை உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரும் ஆதரவு கொடுக்கின்றனர்.
4 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கின்றன. அத்துடன் பீகார் சட்டசபையில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு, 21 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரித்தனர்.
இதனால் ஜிதன்ராம் மஞ்சி அரசு எளிதாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது. அதே நேரத்தில் 88 எம்.எல்.ஏக்கள் கொண்ட பாஜக வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தது.