ஜம்மு காஷ்மீரில் மீண்டும் வெறியாட்டம்- பயங்கரவாதிகளால் பீகார் தொழிலாளர் சுட்டுக் கொலை
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பீகார் மாநில தொழிலாளர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளின் இத்தாக்குதலால் காஷ்மீரில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. இதனையடுத்து நாட்டின் பிற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரிலும் வெளி மாநிலத்தவர் குடியேற, பணிபுரிய, சொத்துகள் வாங்க இருந்த தடை நீங்கியது.
யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை - ஜம்மு காஷ்மீரில் முடக்கப்பட்ட இணையதள சேவை
370-வது பிரிவு ரத்து
ஆனால் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலமும் ஜம்மு காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக அரசியல் செயல்பாடுகள் அங்கு முடங்கி இருக்கின்றன.
பயங்கரவாதிகள் தாக்குதல்
இந்நிலையில் வெளி மாநிலத் தொழிலாளர்களை குறிவைத்து கடந்த ஆண்டு காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஜம்மு காஷ்மீரை விட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பினர். பல நூற்றுக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேற நேர்ந்தது.
வெளி மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்
கடந்த சில மாதங்களாக இத்தாக்குதல் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் பயங்கரவாதிகள் வெறியாட்டம் போட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் சும்பல் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நேற்று தாக்கதல் நடத்தினர். இத்தாக்குதலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அம்ரேஸ் என்ற தொழிலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Recommended Video
பெரும் பதற்றம்
இச்சம்பவம் தொடர்பாக அம்ரேஸின் சகோதரர் கூறியதாவது: அதிகாலை 12.20 மணிக்கு பயங்கர துப்பாக்கிச் சூட்டு சப்தம் கேட்டது. அப்போது என் சகோதரரை காணவில்லை. அவரை கழிவறையில் சென்று தேடிய போது ரத்தவெள்ளத்தில் மிதந்து கிடந்தார். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தோம். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இவ்வாறு அம்ரேஸின் சகோதரர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் வெளி மாநில தொழிலாளர்கள் மீண்டும் குறி வைக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.