பீகாரில் எல்லாமே ராங்.. அமைச்சர் உத்தரவை அதிகாரிகளே கேட்பதில்லை.. ஊழல்.. நிதிஷ் குமாருக்கு சங்கடம்
பாட்னா: பீகார் அரசில் எதுவுமே சரியில்லை. முதல்வர் நிதிஷ் குமாரின் அமைச்சர்களே ஆட்சியில் ஊழல் நிலவுவதாக குற்றம் கூற ஆரம்பித்துள்ளனர். அமைச்சரின் பேச்சை அதிகாரிகள் கூட கேட்பது கிடையாது என்ற நிலைமை அங்கு உருவாகியுள்ளது.
எதிர்க்கட்சி.. அல்லது குறைந்தபட்சம் கூட்டணி கட்சி ஆட்சி மீது குறை கூறி இருந்தால் கூட பரவாயில்லை. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், சொந்த கேபினட் அமைச்சர்களும் ஆட்சி மீது குற்றம் சுமத்த தொடங்கியுள்ளது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பீகார் அரசின் தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது என்பதை கண்ணாடிபோல பிரதிபலிக்கிறது இந்த நிகழ்வுகள்.

அமைச்சர் புலம்பல்
இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் பீகார் மாநில சமூக நலத் துறை அமைச்சர் மதன் ஷானி. சமூக நலத்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் தனது உத்தரவை ஏற்று நடக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ள அமைச்சர், தான் வகிக்கும், அமைச்சர் பதவியில் இருந்து, சனிக்கிழமை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதிகாரிகள் கேட்பது இல்லை
இதுகுறித்து மதன் ஷானி அளித்துள்ள பேட்டியில் பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் நிரப்புவது தொடர்பாக தான் பிறப்பித்த உத்தரவுகளை முதன்மை செயலாளர் நிறைவேற்றவில்லை. அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு அதிகாரி தனது உத்தரவை நிறுத்தி வைக்க முடியும் என்றால், இந்த அமைச்சர் பதவியில், நான் எதற்காக இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதிஷ் குமார் கவனம்
இந்த நிகழ்வுகள் தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் கவனத்துக்கு கொண்டு சென்றீர்களா என்று நிருபர்கள் அமைச்சர் மதனிடம் கேள்வி எழுப்பியபோது, நான் எதற்காக அவரது கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி நான் அவரது கவனத்திற்கு கொண்டு சென்றால் நான் ஏதோ அவரை பிளாக்மெயில் செய்கிறேன் என்று தான் நினைத்துக் கொள்வார் என்று பதிலளித்துள்ளார். மேலும் தனது ராஜினாமா கடிதம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் அதிருப்தி
பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி அமைச்சர் மதனுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். ஜிதன்ராம் மகன் சந்தோஷ் மாஞ்சி தற்போது நிதிஷ்குமார் அமைச்சரவையில் அமைச்சர் பதவியில் இருக்கிறார். அவருக்கும் அதிகாரிகள் இதுபோல ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பதால் அமைச்சர்கள் சிலர் ஒரு பக்கமாக இணைய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டனர் என்பதுதான் பீகார் நிலவரமாக இருக்கிறது.

ஊழல் குற்றச்சாட்டு
ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இப்படி அதிருப்தி வெளிப்படுத்தி வருகிறார்கள் என்றால், இன்னொரு பக்கம் கூட்டணியில் உள்ள பாஜக எம்எல்ஏக்கள், கினந்திர சிங் கயானு மற்றும் ஹரிபுஷன் தாக்கூர் ஆகியோர், அதிகாரிகள் பதவியிடங்களை நிரப்ப அமைச்சர்கள் வெளிப்படையாக பணம் பெறுவதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர். கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications