அடடே! காங். முதல்வர் அசோக் கெலாட்டை காப்பாற்றுவதே பாஜகவின் மாஜி முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாதானாம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் அரசை காப்பாற்றுவதில் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான வசுந்தரராஜே சிந்தியாதான் தீவிரமாக செயல்படுவதாக பாஜகவின் கூட்டணி கட்சி எம்.பி. ஹனுமன் பெனிவால் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு துணை முதல்வர் சச்சின் பைல்ட் திடீரென நெருக்கடி கொடுத்தார். சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிரான வழக்கு.. நாளை புதிய மனு தாக்கல் செய்ய சச்சின் பைலட்டுக்கு உத்தரவு
இன்று பைலட் வழக்கு விசாரணை
ஆனால் இந்த கலகக் குரல் ஒர்க் அவுட் ஆகவில்லை. இது சச்சின் பைலட்டுக்கு பெரும் பின்னடைவானது. இதனிடையே சச்சின் பைலட் உள்ளிட்ட கலகக் குரல் எழுப்பிய 19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.
இன்று கெலாட் பிரஸ் மீட்
மேலும் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று செய்தியாளர்களையும் சந்தித்து பேசுகிறார். இதனால் ராஜஸ்தான் மாநில அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில்தான் பாஜகவின் கூட்டணி கட்சி எம்.பி. ஹனுமன் பெனிவால் அதிரடி புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.
பாஜக கூட்டணி எம்பி திடுக் புகார்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி எம்பியான் ஹனுமன் பெனிவால், ஜாட் ஜாதியை சேர்ந்த எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு வசுந்தரராஜே சிந்தியா பேசியிருக்கிறார். சச்சின் பைலட்டை ஜாட் ஜாதி எம்.எல்.ஏக்கள் ஆதரிக்க கூடாது எனவும் கூறியிருக்கிறார் வசுந்தரராஜே. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என கூறியுள்ளார்.
வசுந்தரராஜேவின் மவுனம்
ராஜஸ்தான் அரசியலில் இத்தனை களேபரங்கள் நடந்து வரும் நிலையில் வசுந்தரராஜே சிந்தியா மவுனமாக இருந்து வருகிறார். ஜெய்ப்பூரில் நடைபெறுவதாக இருந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அவரை அழைத்த போது கூட, கட்டாயம் வந்தே ஆக வேண்டும் எனில் வருகிறேன். இல்லையெனில் நீங்களே கூட்டம் நடத்துங்கள் என வசுந்தரராஜே சிந்தியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.