ஐதராபாத்ல இருக்குறவங்க வரணும்.. நாளைக்கு வேண்டாம் ப்ளீஸ்.. பாஜக வக்கீலின் அடடே வாதம்
ஐதராபாத்தில் உள்ள காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் பெங்களூர் வர நேரமாகும் என்பதால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்று பாஜக தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி வாதிட்டுள்ளது வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

டெல்லி: ஐதராபாத்தில் உள்ள காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் பெங்களூர் வர நேரமாகும் என்பதால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்று பாஜக தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி வாதிட்டுள்ளது வைரல் ஆகியுள்ளது. நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படியாவது தள்ளி போட வேண்டும் என்று இவர் இப்படி பேசியுள்ளார்.
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதில் காங்கிரஸ் தரப்பில் கபில் சிபில் ஆஜராகி இருந்தார். பாஜக தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி இருந்தார்.
இதில் தொடக்கம் முதலே பாஜக கட்சிக்கு எதிரான வாதம் சென்று கொண்டு இருந்தது. மூத்த வழக்கறிஞர் முகுல் பாஜக கட்சிக்கு எவ்வளவு ஆதரவாக பேசியும், நீதிபதிகள் கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் கடைசியில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாமா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு காங்கிரஸ் கட்சி உடனே ஒப்புக்கொண்டது. ஆனால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது, அமைச்சரவையை உடனே கூட்ட முடியாது என்று பாஜக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி உள்ளது. இதற்கு பாஜக சொன்ன காரணம்தான் தற்போது வைரல் ஆகியுள்ளது.
முகுல் ரோத்தகி '' நாளை சட்டசபையை கூட்டுவது மிகவும் கடினம். காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் எல்லோரும் ஐதராபாத்தில் இருக்கிறார்கள். அவர்களால் பெங்களூர் நாளையே வர முடியாது. எல்லோரும் வேறு இடத்தில் இருக்கிறார்கள், உடனடியாக அவையை கூட்ட முடியாது'' என்றார். ஆனால் நீதிபதிகள் இதை ஏற்கவில்லை.
நீங்கள் என்ன செய்தாலும் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர். பாஜக சார்பாக ஆஜரான வக்கீல் இப்படி பேசியது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படியாவது நேரம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர் காங்கிரஸ் - மஜதவிற்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நீதிமன்றத்தில் காமெடி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications