தோற்றுவிடுவோம் என்பதாலேயே தேர்தலில் போட்டியிடாமல் ஓடிப்போன ப.சிதம்பரம்: பாஜக தாக்கு
டெல்லி: லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதற்காகவே நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடாமல் தப்பி ஓடிவிட்டார் என்று பாரதிய ஜனதா கட்சி சாடியுள்ளார்.
தமிழகத்தில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. அதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோரது பெயர் இடம்பெறவில்லை. சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துவிட்டது. அவர் தேர்தலில் போட்டியிடாமல் விலகி ஓடுகிறார். இப்படி காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் போட்டியிட தயங்குவதன் மூலம் தோற்றுவிடுகிறோம் என்ற அவர்களது மனநிலை தெளிவாகவே புரிகிறது என்றார்.
இதேபோல் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பொருளாதாரக் கொள்கைகளின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் ப.சிதம்பரம். தற்போது நிச்சயமாக தோல்வியைத் தழுவிவிடுவோம் என்று தெரிந்தே அவர் தேர்தலில் போட்டியிடாமல் ஓடியிருக்கிறார் என்றார்.
ஆனால் இதை நிராகரிக்கும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்,. என் அப்பா 9 தேர்தல்களை சந்தித்தவர், தேர்தல் போட்டிகளில் இருந்து விலக இது தருணம் என்று அவர் நினைத்துள்ளார். ஆனால் அதற்காக அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடவில்லை என்றார்.