விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்!!
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் ஆணைய செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- ஆளும் கட்சியின் அதிகார பலம், பண பலத்துக்கு அடிபணியாமல் தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி
- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்க் வாழ்த்துகள்
- ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்
- தேர்தலின் போது தேவையின்றி 144 தடை உத்தரவு பிறப்பித்தது; பண பட்டுவாடாவை கண்டும் காணாமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்
- மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
- தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதற்கு கண்டனம்
என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.