மோடி அலையில் டெல்லியின் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்- இந்தியா டுடே சர்வே
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கான ஆதரவு அலை வீசுவதால் டெல்லியில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளையும் பாஜக கைப்பற்றலாம் என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு.
லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்தியா டுடே குழுமம் டெல்லியில் நடத்திய கருத்து கணிப்பில் மோடி அலை வீசுவதாக குறிப்பிட்டிருக்கிறது. இங்கு கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் 7 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது.
பாஜகவுக்கு 5-7
ஆனால் இம்முறை களநிலவரம் தலைகீழ் களேபரமாக இருக்கிறதாம். அடித்துக் கொண்டிருக்கும் மோடி அலை என்பதில் 7 தொகுதிகளையுமே பாஜக கைப்பற்றலாம். அல்லது 5 முதல் 7 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கலாமாம். பாஜகவுக்கு 41% வாக்குகள் கிடைக்குமாம்.
காங்கிரஸ்- ஆம் ஆத்மிக்கு பரிதாபம்
காங்கிரஸ் கட்சி அனேகமாக 1 இடத்தில் வெல்லக் கூடிய வாய்ப்பு இருக்கிறதாம். இக்கட்சிக்கு 23% வாக்குகள் கிடைக்கலாம்.
ஆம் ஆத்மிக்கு 2?
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஆம் ஆத்மி கட்சியால் அதிகபட்சமாக 2 தொகுதிகள் மட்டுமே கைப்பற்ற முடியுமாம். மொத்தம் 28% வாக்குகளை ஆம் ஆத்மி கைப்பற்ற முடியும்.
மோடிக்கு 44%
இம்மாநிலத்தில் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று 44% பேரும் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமராக 24% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுலுக்கு 3வது இடமாக 19% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யார் முதல்வர்?
தற்போதைய நிலையில் டெல்லி மாநில முதல்வராக பாஜகவின் ஹர்ஷ்வர்தனுக்குத்தான் அதிக ஆதரவு. அதாவது 29% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கேஜ்ரிவாலுக்கு பின்னடைவு
அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 19% பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.