ரூ20 கோடி கொடுத்து எம்.எல்.ஏக்களை வாங்க பாஜக முயற்சி: கேஜ்ரிவால்
டெல்லி: ரூ20 கோடி கொடுத்து டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வாங்க பாரதிய ஜனதா முயற்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அதிக இடங்களைப் பெற்றது. ஆனால் 2வது இடம் பெற்ற ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வரானார். ஆனால் இந்த ஆட்சி குறுகிய காலமே நீடித்தது.
அரவிந்த் கேஜ்ரிவால் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அம்மாநில சட்டசபை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவ்வப்போது ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில்தான் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளதாவது:
நேர்மையையும், நெறிமுறைகளையும் மீறிய வகையில் ஒவ்வொருவருக்கும் 20 கோடி ரூபாய் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதன் மூலம் டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. இதுவா ஜனநாயகம்?
இது முற்றிலும் தவறு. சட்டத்திற்கு புறம்பான இது போன்ற செயல்களின் மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை செலவிட்டு, பா.ஜ.க. ஆட்சி அமைக்குமானால், அந்த நேர்மையற்ற ஆட்சியில் உங்கள் மின் கட்டணம் உயர்த்தப்படும்.
ஊழல் பெருகும். விலைவாசி உயரும். குதிரை பேரம் போல் நேர்மையற்ற வகையில் அமைக்கப்படும் ஆட்சி பெண்களுக்கான பாதுகாப்பை வழங்குமா? இந்த விவகாரத்தில் மோடி அமைதி காப்பது ஏன்? டெல்லி மக்கள் இதற்கும் மேலும் மவுனமாக இருக்க முடியாது.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.