டெல்லி விமானத்தில் வெடிகுண்டு புரளி – வெடிபொருள் கைப்பற்றபடவில்லை!
பெங்களூர்: டெல்லி - கேரளா விமானத்தில் கிளப்பப்பட்ட வெடிகுண்டு பீதியால் பயணிகள் பதட்டமடைந்தனர். சோதனையில் எந்த வெடிபொருளும் விமானத்தில் கைப்பற்றப்படவில்லை.
கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு 8.40 மணிக்கு புறப்பட்ட ஏர் இண்டியா ஏ.ஐ.407 விமானத்தில் 156 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 8 ஊழியர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது தொலைபேசி மூலம் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. உடனே அந்த விமானத்தின் விமானியை தொடர்பு கொண்ட கொச்சி விமான நிலைய அதிகாரிகள், அருகில் உள்ள விமான நிலையத்தில் உடனடியாக தரையிறங்கும்படி உத்தரவிட்டனர்.

அப்போது, கர்நாடக மாநிலத்திற்கு மேல் சென்று கொண்டிருந்த அந்த விமானம் பெங்களூரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரவு சுமார் 9.57 மணியளவில் அவசரமாக தரையிறங்கியது.
பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு நீண்ட நேரம் வரை அந்த விமானத்தை சோதனையிட்டதில் எந்த வெடிப்பொருளும் விமானத்தினுள் இல்லை.
கடைசியாக இது புரளிதான் என்று தெரிந்த பின்பு விமானம் புறப்பட்டுச் சென்றது.
இந்நிலையில் குறுந்தகவல் அனுப்பி புரளியைக் கிளப்பியதாக கேரளாவினர் சிலர் மீது ஏர் இண்டியா நிறுவனம் புகார் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications