”பணமும், மதுவும் கரைபுரண்ட தேர்தல்” - 300 கோடி ரூபாயும், 1 லட்சம் லிட்டர் மதுவும் இதுவரை பறிமுதல்
டெல்லி: லோக்சபா தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், வரம்புமீறி செலவு செய்வதை தடுக்கவும் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதற்காக நாடு முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் ரோடுகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
இது போன்று நடத்திய சோதனையில் நாடு முழுவதும் கடந்த 17 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லிட்டர் லிட்டராய் “தண்ணீ “:
அது மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரம் லிட்டர் மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், பறக்கும்படை அதிகாரிகளின் சோதனைகளில் 30 ஆயிரம் கிலோ போதை பொருட்களும் சிக்கின.
1000 கோடி போதைப் பொருள்:
அதில் ஹெராயின், ஓபியம், கஞ்சா மற்றும் ரசாயன போதை பொருட்களும் அடங்கும். அவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டும்.போதை பொருட்களை பொறுத்த மட்டில் இமாசல பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அதிக அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆந்திராவில் அதிகம்:
பணம் மற்றும் மதுபான வகைகளை பொறுத்தவரை ஆந்திர பிரதேசத்தில்தான் மிக அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கருப்புபண தடுப்பு:
இந்த தகவலை தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும், தேர்தலில் கருப்பு பணம் நடமாடுவதை தடுக்கவும் தேர்தல் கமிஷன் இந்த தடவை முதன் முறையாக இது போன்ற கடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.