இரு கட்சிகளும் மதுவை ஒழிக்கப் போவது இல்லை.. பாமக 2.0 மாற்றத்திற்கான திட்டம்.. அன்புமணி ராமதாஸ்!
ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் 55 ஆண்டு காலம் இரு கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. எத்தனையோ போராட்டங்கள் பண்ணிவிட்டோம். ஆனாலும் மது கடையை மூடுவதாக அவர்கள் இல்லை. தமிழகத்தில் 2.0 என்ற நிலையை ஏற்படுத்துவோம் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பாமக நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அப்போது தமிழகத்தில் பாமக 2.0 என்ற நிலையை ஏற்படுத்துவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

எந்த மாற்றமும் ஏற்படவில்லை
தமிழகத்தில் 55 ஆண்டு காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஆனால், மக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. டாஸ்மாக் கடைகளும் பார்களுமே அதிகரித்து வருகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் இலவசமாக தரமான கல்வி, சுகாதாரம், மருத்துவம் உருவாக்கி கொடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி குடும்பத்தை பாதுகாப்போம்.

பாமக 2.0 மாற்றத்திற்கான திட்டம்
தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். வரும் தேர்தலில் பாமகவிற்கு வாய்ப்பு அளித்து அக்கட்சியின் செயல்பட்டை பார்க்க வேண்டும் என்ற மனநிலையில் பொதுமக்கள் இருக்கிறார்கள். எனவே இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் பெண்கள் மனது வைத்தால் கண்டிப்பாக ஒரு மாற்றம் வரும். பாமக 2.0 மாற்றத்திற்கான திட்டத்திற்கு மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள இளைஞர்களை பலப்படுத்த வேண்டும்" என்றார்.

இனிவரும் காலம் நம்முடைய காலம்
மேலும் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "இனிவரும் காலம் நம்முடைய காலம். எத்தனையோ போராட்டங்கள் பண்ணிவிட்டோம். அதிமுக ஆட்சியிலும் போராட்டம் பண்ணினோம். திமுக ஆட்சியிலும் போராட்டம் பண்ணினோம். நீதிமன்றம் போயிருக்கிறோம். எல்லாம் பண்ணி பார்த்துட்டோம். ஆனாலும் மதுக்கடையை மூடுவதாக அவர்கள் இல்லை. வரும் காலத்தில் மக்கள் எல்லாம் நமக்கு வாக்களிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துவோம்" என்றார்.

பாமக திட்டம் என்ன?
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று பேசி வருகிறது. கடந்த மாதம் மயிலாடுதுறையில் பாமக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு பேசிய அன்புமணி ராமதாஸ், வரும் பாராளுமன்ற தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி வைக்கப்படும் என்றும் அதிமுக கூட்டணியில் பாமக இல்லை என்று தெளிவாக பேசியிருந்தார். இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக அமைக்கும் கூட்டணி மற்றும் அதன் வியூகம் என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் தற்போதே கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications