கொடியேற்றத்துடன் துவங்கியது திருப்பதி பிரம்மோற்சவம்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று இரவு நடைபெறுகிறது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 1-ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.
பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் தாயார்களுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும் விதமாக, மீன லக்னத்தில் பிரம்மோற்சவம் கொடி ஏற்றப்படுவது வழக்கம்.
அதன்படி பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவத்திற்காக புதிய மஞ்சள் துணியில் கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடியை நான்கு மாடவீதியில் உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது. பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் பட்டாட்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட கொடி கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது.
கொடியேற்றத்தின்போது மாநில அரசு சார்பில் இரவு 7.30 மணியளவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து, 2018ம் ஆண்டுக்கான தேவஸ்தான டைரி, காலண்டரை வெளியிட உள்ளார்.
பிரம்மோற்சவ முதல் நாளான இன்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். 2-ஆம் நாளான நாளை காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும், 25-ஆம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 26-ஆம் தேதி காலை கல்பவிருட்ச வாகனத்திலும், இரவு சர்வபூபால வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
27-ஆம் தேதி காலை மோகினி அவதாரத்திலும், இரவு கருட சேவை நடைபெறுகிறது. 28ம் தேதி காலை ஹனுமந்த வாகனத்திலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கரத உற்சவம் நடைபெறுகிறது. அன்றிரவு கஜ வாகனத்திலும், 29-ஆம் தேதி காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும், 30-ஆம் தேதி காலை ரத உற்சவம், இரவு அஸ்வ வாகனத்திலும் பவனி வருகிறார். பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான அக்டோபர் 1ம் தேதி காலை பல்லக்கு உற்சவமும், 6 மணி முதல் 9 மணிக்குள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
திருப்பதி மற்றும் திருமலை முழுவதும் வண்ண விளக்கு அலங்கார வளைவுகளால், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.