காங்கிரஸுக்கு செக்.. "சுயேட்சைக்கு ஓட்டு” : பகுஜன் சமாஜ் கொறடா உத்தரவு - ராஜஸ்தானில் பரபரப்பு!
ஜெய்பூர் : பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய 6 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி இருக்கும் சுபாஷ் சந்திராவுக்கு வாக்காளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில், காங்கிரசுக்கு 2 இடங்களும், பாஜ.வுக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகி விட்டது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கும் பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கி உள்ள சுபாஷ் சந்திராவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தாவிய 6 எம்.எல்.ஏக்களும் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில்
ராஜஸ்தான் மாநிலத்தில் 4 மாநிலங்களவை எம்.பிகள் பதவி காலியாகும் நிலையில், ஜூன் 10ஆம் தேதி 4 இடங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்ய சபா தேர்தல் வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு எம்.பி வெற்றி பெறவும் அங்கு 41 எம்.எல்.ஏக்கள் தேவை. அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியில் தற்போது 108 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதன் மூலம் 2 இடங்களை காங்கிரஸ் எளிதாகக் கைப்பற்றும். மூன்றாவது இடத்தைப் பெற காங்கிரஸுக்கு மேலும் 15 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

பாஜகவால் சிக்கல்
ராஜஸ்தானில் பாஜகவில் 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அக்கட்சியால் ஒரு எம்.பியை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக சுபாஷ் சந்திராவும் ராஜ்ய சபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நான்காவது இடத்திற்கு காங்கிரஸ் சார்பில் ஒருவரும், பாஜக ஆதரவோடு சுயேட்சை ஒருவரும் களத்தில் இருப்பதால் தங்கள் எம்.எல்.ஏக்கள் பாஜகவினரால் பேரம் பேசப்படலாம் என்பதால், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் உதய்பூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யாருக்கும் போதிய ஆதரவில்லை
இரண்டு கட்சிகளுக்குமே 4வது எம்.பியை தேர்ந்தெடுப்பதற்கு போதிய எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால், மாநில கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை அக்கட்சிகள் கோரி உள்ளன. இந்நிலையில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சுபாஷ் சந்திராவுக்கு வாக்களிக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சி அக்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு நேற்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள்
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சின்னத்தில் நின்று வென்ற 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திர குதா, லகான் மீனா, தீப்சந்த் கெரியா, சந்தீப் யாதவ், ஜோகிந்தர் அவானா மற்றும் வாஜிப் அலி ஆகியோர் 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் பா.ஜ.க ஆதரவுடன் நிற்கும் சுயேச்சை வேட்பாளர் சுபாஷ் சந்திராவுக்கு வாக்காளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் நேற்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரவு மீறப்பட்டால்
கட்சி தாவிய எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக பகுஜன் சமாஜ் தொடர்ந்த வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களித்தால் அவர்களின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டுப்படுத்தாது
அதேநேரத்தில், நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள் இல்லை என்பதால் கொறடா உத்தரவு எங்களைக் கட்டுப்படுத்தாது. சட்டசபை சபாநாயகர் ஏற்கனவே நாங்கள் கட்சி மாறியதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். பாஜகவின் கைப்பாவையாக பகுஜன் சமாஜ் கட்சி செயல்பட்டு வருகிறது என கட்சி தாவிய எம்.எல்.ஏக்களில் ஒருவரான வாஜிப் அலி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications