நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.23-ல் தொடக்கம் - பிப்.26-ல் ரயில்வே, 28-ல் பொதுபட்ஜெட்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 23-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தொடரில் பிப்ரவரி 26-ந் தேதி ரயில்வே பட்ஜெட்டும் 28-ந் தேதி பொதுபட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
டெல்லியில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு பகுதிகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
பிப்ரவரி 23-ந் தேதி முதல் மார்ச் 20-ந் தேதி வரை ஒரு பகுதியாகவும் பின்னர் ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 8-ந் தேதி வரை 2வது பகுதியாகவும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். பின்னர் 26-ந் தேதியன்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 27-ந் தேதியன்று பொருளாதார ஆய்வறிக்கையையும் 28-ந் தேதியன்று பொதுபட்ஜெட்டையும் தாக்கல் செய்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்ய இருக்கும் முதலாவது முழு அளவிலான பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.