நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.29-இல் தொடக்கம்... பிப் 1-இல் மத்திய பட்ஜெட்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29ஆம் தேதி தொடங்குகிறது.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் பிப்ரவரி 1-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது என்பது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 29-இல் பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்குகிறது.
அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அன்றைய தினமே உரையாற்றவுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கூட்டத்தொடர் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடக்கிறது. 2-ஆவது பகுதி மார்ச் 5 முதல் ஏப்ரல் 6 வரை நடக்கிறது. பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 4-ஆம் தேதி வரை நாடாளுமன்றத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.
ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் ஒன்றாக்கப்பட்டுவிட்டதால் மத்திய பட்ஜெட் என்ற பெயரில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மொத்தம் 40 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் முத்தலாக்கிற்கு தடை விதிக்கும் மசோதா மற்றும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா உள்ளிட்டவற்றை சட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.