உ.பி: கைரானாவில் ஆர்.எல்.டி. வேட்பாளர் அபார வெற்றி.. பாஜக படுதோல்வி
உத்தர பிரதேச மாநிலம் கைரானா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கைரானா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து முடிந்துள்ளது. இங்கு ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தப்புசம் ஹாசன் அபார வெற்றிபெற்றுள்ளார். .
தற்போது இந்தியா முழுக்க பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கடந்த மே 28ம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது.
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கைரானா நாடாளுமன்ற தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏற்கனவே அங்கு நடந்த கோரக்பூர், பெஹல்பூர் இடைத்தேர்தலில் பாஜக மோசமாக தோல்வி அடைந்தது.
இதனால் இந்த தொகுதியின் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது. கைரானா நாடாளுமன்ற தொகுதியின் சார்பாக வெற்றிபெற்ற பாஜகவின் குக்கும் சிங் சில மாதம் முன்பு மரணம் அடைந்தார். அவரது மகள் மிரிகங்கா சிங் அந்த தொகுதியில் பாஜக சார்பாக நிற்கவைக்கப்பட்டுள்ளார்.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த கட்சி சார்பாக தப்புசம் ஹாசன் என்ற இஸ்லாமிய பெண் வேட்பாளர் நிற்கவைக்கப்பட்டுள்ளார். மொத்தம் இங்கு 16 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இதில் 6 லட்சம் பேர் இஸ்லாமியர்கள். கணிசமான நபர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் காங்கிரஸ் கூட்டணி இங்கு வெற்றிபெறும் என்று கூறப்பட்டது. இங்கு ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தப்புசம் ஹாசன் தற்போது வெற்றிபெற்றுள்ளார். அவர் 50297 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அவர் மொத்தமாக 401461 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் மிரிகங்கா 351164 பெற்று தோல்வி அடைந்துள்ளார். உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்வாகி உள்ள ஒரே இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.