எம்.எல்.ஏவாக தோல்வி.. ஆனா ஆட்சி உறுதி - மம்தா முதல்வராக பதவியேற்க முடியுமா?
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மெகா வெற்றிப் பெற்று இருந்தாலும், நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்துள்ளார். அப்படியெனில் அவர் முதல்வராக பதவி ஏற்கமுடியுமா?
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவும் இடையே நேரடி மோதல் இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இரு கட்சியும் ஒரளவு சமமான எண்ணிக்கையில் இருந்தன.
அடுத்தடுத்த சுற்றுகளில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை பெறத் தொடங்கியது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திரிணாமுல் 211 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை 214 இடங்களில் திரிணாமுல் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. பாஜக 75 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

முதலில் வெற்றி அறிவிப்பு
இருப்பினும் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரி தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளில் சுவேந்து அதிகாரியும், மம்தாவும் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர். மிக நெருக்கமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மம்தா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

மம்தா தோல்வி
ஆனால், அது முன்னிலை நிலவரம் தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியைத் தழுவியதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், 'முதலில் வெற்றிப் பெற்றதாக அறிவித்துவிட்டு, இப்போது மாற்றிக் கூறுகிறார்கள். நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம்' என்று மம்தா கூறியிருக்கிறார்.

ஆறு மாத காலத்திற்குள்
இது ஒருபுறமிருக்க, போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. நிச்சயம் பதவியேற்க முடியும். மம்தா தற்போது தோல்வி அடைந்து இருந்தாலும், அவர் முதல்வராக பதவியேற்று, பின் ஆறு மாத காலத்திற்குள் ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ. ஆக முடியும்.

எம்.எல்.ஏ.க்கள் கிடையாது
இதற்கு முன் 2011ல் மம்தா முதல்வராக பதவியேற்ற போது கூட, அவர் எம்.எல்.ஏ. கிடையாது. மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே, பீகாரின் லாலு பிரசாத் யாதவ், உ.பி.யில் யோகி ஆதித்யநாத், பீகாரில் நிதிஷ் குமார், ராப்ரி தேவி, மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக இல்லாமல் முதல்வராக பதவியேற்று இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications