”ஹனிமூன்” விவகாரத்தில் சிக்கிய யோகா குரு ராம்தேவ் மீதான வழக்கு – லக்னோவிற்கு மாற்றம்
டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்கினை உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு மாற்றியிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பேசிய யோகா குரு ராம்தேவ், சுற்றுலா மற்றும் ஹனிமூன் செல்வதுபோல் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலித்துகள் வசிக்கும் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக விமர்சனம் செய்தார்.

தலித்துகளை அவமதிக்கும் வகையில் அவர் பேசியதாக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி மது விகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கின் தற்போதைய நிலை குறித்து டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பவம் நடந்த இடம் லக்னோ என்பதால், இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை லக்னோ காவல்துறைக்கு அனுப்பி மேற்கொண்டு விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
"ஏற்கனவே இதே குற்றச்சாட்டு தொடர்பாக ராம்தேவ் மீது லக்னோவிலும் ஒரு வழக்கு உள்ளது. ஒரே பிரச்சினையில் ஒரே நபருக்கு எதிராக வெவ்வேறு இடங்களில் விசாரணை நடத்தக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. எனவே, அதன் அடிப்படையில், இந்த வழக்கு மேல் விசாரணைக்காக லக்னோ சீனியர் போலீஸ் சூப்பிரெண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றக்கூடாது என்று புகார்தாரர் கவுதம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார். டெல்லியில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் ஜனவரி 24 ஆம் தேதி மேற்கொண்டு விசாரணை நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications