காவிரி நிபுணர் குழுவை அமைக்கக் கூடாது... முதல்வர் சித்தராமையாவுக்கு தேவ கவுடா கடிதம்
காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் நிபுணர் குழுவை நியமிக்கும் முடிவை கர்நாடகா ஏற்கக் கூடாது என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா கேட்டுக் கொண்டுள்ளார்.
பெங்களூர்: காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் நிபுணர் குழுவை நியமிக்கும் முடிவை கர்நாடகா ஏற்கக் கூடாது என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை இதுவரை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக மத்திய நீர் பாசனத்துறை தலைமையில் அனைத்துக் கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி நிபுணர் குழு அமைப்பது குறித்து மூத்த வழக்கறிஞர் நாரிமனை சந்தித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முதல்வருக்கு கடிதம்
இந்த குழு அமைக்கப்பட்டால் கர்நாடகத்துக்கு சாதகமாக அமையாது என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, காவிரி நிபுணர் குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
சாதகமாக இருக்காது
கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவிரி நிபுணர் குழு அமைக்கும் முடிவை ஏற்கக் கூடாது. அவ்வாறு ஏற்றால், அது கர்நாடகத்துக்கு சாதகமாக அமையாது.
மத்திய அரசால் முடியாது
வறட்சி காலங்களில் தண்ணீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்சினைகள் காவிரி நடுவர் மன்றத்தால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும். மத்திய அரசால் தீர்க்க முடியாது. கர்நாடக மாநில விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் என்றால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பு தெரிவிக்கப்படும் வரை காவிரி நிபுணர் குழு அமைக்கப்படுவதை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாரிமனுக்கும் கடிதம்
இதேபோல் காவிரி வழக்கில் கர்நாடகம் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் நாரிமனுக்கும் தேவ கவுடா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று பெங்களூருவில் அளித்த பேட்டியில், காவிரி பிரச்சினை 130 ஆண்டுகள் பழமையானது. நான் முதல்வராக, பிரதமராக பணியாற்றியபோது காவிரி பிரச்சினைக்காக போராடினேன். காவிரி பிரச்சினையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.