தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து சட்டசபை தீர்மானம்.. கோர்ட் அவமதிப்பு வழக்கில் சிக்குமா கர்நாடகா?
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, காவிரி தண்ணீர் கர்நாடக குடிநீர் தேவைக்கு மட்டுமேதான் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கர்நாடக சட்டசபை. இது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் 27ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி பங்கீடு குறித்த வழக்கு வரும்போது, நீதிமன்றம் தனது உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதா என்ள கேள்வியை முன்வைக்கும். அப்போது, சட்டசபை தீர்மானத்தை கர்நாடக அரசு சமர்ப்பித்து, சட்டசபை கூறியதால் தங்களால் தண்ணீர் திறக்க முடியவில்லை என தெரிவிக்கும்.
இந்த தீர்மானம், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது என்று நீதிமன்றம் கருதினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். கர்நாடக தலைமைச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகுவர். 1 மாதம் முதல் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
புத்திசாலித்தனம்
ஆனால், கர்நாடக சட்டசபை தீர்மானம் என்பது நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகுமா என்பதே இப்போது கேள்விக்குறி. இதுகுறித்து சில சட்ட வல்லுநர்களிடம் பேசியபோது, அவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கர்நாடக அரசு மிகவும் யோசித்து, புத்திசாலித்தனமாக அந்த தீர்மானத்தை தயாரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
உச்சநீதிமன்றம் பற்றி கூறவில்லை
ஏனெனில், தீர்மானத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பற்றி எந்த வார்த்தையையும் குறிப்பிடவில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்றும் கூறவில்லை. ஆனால், காவிரி நீர் சேகரிக்கப்பட்டுள்ள 4 அணைகளின் தண்ணீரும் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக காவிரி பாசன பகுதி மக்கள் குடிநீர் தேவைக்கு மட்டுமே.. என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பேச்சாலும் சிக்கல் இல்லை
மேலும், சட்டசபை விவாதத்தில் குமாரசாமி உள்ளிட்டோர் நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்ததும், நீதிமன்ற அவமதிப்பின்கீழ் வராது. ஏனெனில், சட்டசபைக்குள் பேசும் ஒரு விஷயத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உண்டு. சட்டசபைக்குள் எதை பேசினாலும் அதை நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொள்ள நீதிமன்றத்திற்கே அதிகாரம் கிடையாது. அவ்வளவு ஏன்.. சட்டசபைக்குள் ஒரு அசம்பாவிதம் நடந்தால் கூட போலீசார் உள்ளே நுழைய முடியாது. சபாநாயகர் அனுமதித்தால் மட்டுமே நுழைய முடியும்.
தள்ளுபடிக்கு வாய்ப்பு
சுப்ரீம் கோர்ட்டில் 27ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, சட்டசபை தீர்மானத்தை, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி கோர்ட் தள்ளுபடி செய்யவே அதிக வாய்ப்புள்ளதாகவும், சமயோஜிதமாக தயாரிக்கப்பட்ட அந்த தீர்மானத்தை, கோர்ட் அவமதிப்பு என கருத வாய்ப்பில்லை எனவும் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.