காவிரியில் தடுப்பணை கட்டும் கர்நாடகம்: தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு
டெல்லி: காவிரி நீரைக் கொண்டு கர்நாடகத்தில் புதிய நீர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த கர்நாடக அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் பி. பாலாஜி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்:
"காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டில் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்கவில்லை.
இதனால், இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக காவிரி மேற்பார்வைக் குழுவை உச்ச நீதிமன்றம் தாற்காலிக ஏற்பாடாக அமைத்துள்ளது. இந் நிலையில், காவிரியில் தடுப்பணைகளைக் கட்டி பல்வேறு நீர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த கர்நாடக அரசு முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் கடந்த பிப்ரவரியில் செய்தி வெளியானது.
கால்வாய் திட்டங்கள்
குறிப்பாக மண்டியா மாவட்டத்தில் ராமசாமி கால்வாய், காமராஜ் நகரில் ராம்புரா கால்வாய், விஸ்வேஸ்வரய்யா கால்வாய், கபினி வலது கரை கால்வாய் ஆகியவற்றை புனரமைக்கும் வகையில் சில திட்டங்களை கர்நாடக அரசு செயல்படுத்த முயற்சித்து வருகிறது. இத்தகைய செயல்பாடு காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிரானதாகும்.
கர்நாடகா அரசு டெண்டர்
இதை அறிந்திருந்தும் கடந்த பிப்ரவரி 27, மார்ச் 3 ஆகிய தேதிகளில் உள்ளூர் நாளிதழில் புனரமைப்புத் திட்டங்களுக்கான ஒப்பந்தப் புள்ளியை (டெண்டர்) கர்நாடக அரசு வரவேற்று விளம்பரம் செய்தது.
இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கர்நாடக அரசின் தலைமைச் செயலருக்கு கடந்த மார்ச் 17-ஆம் தேதி கடிதம் அனுப்பினார். அதில், "காவிரி நீரைப் பெறும் மாநிலங்கள், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றுடன் கலந்து பேசாமல் நதி நீரை வேறு செயல்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலாண்மை வாரியம்
இந் நிலையில், மேலாண்மை வாரியம் இதுவரை அமைக்கப்படாததால், தன்னிச்சையாக கர்நாடக அரசு புனரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது. புதிய திட்டம் எதுவானாலும், அதன் விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டது. காவிரி மேற்பார்வைக் குழுத் தலைவருக்கும் மத்திய நீர் வளத் துறைக்கும் இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பப்பட்டன.
கர்நாடகம் அலட்சியம்
இந் நிலையில், தமிழகம் அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை கர்நாடக அரசு பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டுகிறது. ஆகவே, உச்ச நீதிமன்றத்தில் இம் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
புதிய திட்டங்கள்
ஏற்கெனவே, காவிரியில் புதிய திட்டங்களை கர்நாடக அரசு செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் 2007-2012ஆம் ஆண்டு வரை நான்கு மனுக்களை தமிழகம் தாக்கல் செய்துள்ளது. அவற்றின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
192 டிஎம்சி தண்ணீர்
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, நீர்ப் பருவ ஆண்டில் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி நீர் கிடைப்பதை பிலிகுண்டுலு நீர் அளவை மையத்தைக் கணக்கிட்டு கர்நாடகம் உறுதிப்படுத்த வேண்டும். ஒதுக்கப்பட்ட நீர் அளவை 10 நாள்கள் இடைவெளி விட்டு கர்நாடகம் திறந்து விட வேண்டும்.
கடிதத்திற்கு பதில் இல்லை
அதற்கான நடவடிக்கையை மேற்பார்வைக் குழு, மத்திய நீர் வள ஆணையம், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். இந் நிலையில், கடந்த மார்ச் 17-ஆம் தேதி காவிரி மேற்பார்வைக் குழுத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்துக்கும் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கப்பெறவில்லை. கர்நாடகத்திடமும் மேற்பார்வைக் குழு விளக்கம் கேட்டதாகத் தெரியவில்லை.
புதிய திட்டங்களுக்குத் தடை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை காவிரி நீரைக் கொண்டு கர்நாடகம் புதிய திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இந் நிலையில், கர்நாடக அரசின் செயல்பாடு சட்டவிரோதமானதாகும். அதைத் தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ மேற்பார்வைக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய சூழலில், புதிய நீர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையிலும், காவிரி விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் பைசல் செய்யப்படும் வரையும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.