சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள்: சன் டிவி- பி.எஸ்.என்.எல்க்கு எதிராக சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு
வழக்கு என்ன?
2004-2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது அவரது சென்னை போட் கிளப் சாலையில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரில் இணைப்பகம் போல செயல்பட்டு வந்தது. இந்த இணைப்புகளை தயாநிதி மாறனின் சகோதரருக்குச் சொந்தமான சன் டிவி அலுவலகத்துடன் பூமிக்கு அடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் மூலம் சட்டவிரோதமாக இணைத்து சகோதரர் நிறுவனத்தின் வர்த்தகத் தேவைக்கு பயன்படுத்தினார் என்பது புகார்.
இது தொடர்பாக எஸ். குருமூர்த்தி 2 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். தயாநிதி மாறனின் இந்த சட்டவிரோத நடவடிக்கையால் பி.எஸ்.என்.எல்.க்கு ரூ440 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணையின் போது கடந்த ஜனவரியில் சிபிஐ மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
எப்.ஐ.ஆர். பதிவு
மேலும் கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துவிட்டதாக சிபிஐ தெரிவித்திருந்தது. இன்று சன் டிவி மற்றும் பி.எஸ்.என்.எல்.க்கு எதிராக சிபிஐ இன்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
அதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் சன் டிவி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களின் அதிகாரிகள் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டனர் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.