வெளிநாட்டினர் வாரம் ரூ. 5000 மாற்ற மத்திய அரசு அனுமதி.. இந்தியர்களுக்கு ரூ.2000தான்!
இந்தியாவில் வசிக்கும் அல்லது சுற்றுலாவாக வந்துள்ள வெளிநாட்டினர் வாரம் ரூ. 5000 வரை எடுக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் இன்று மாலை சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி வங்கிக் கவுண்டர்களில் இன்று நள்ளிரவுக்கு மேல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து புதிய ரூபாய்களைப் பெற முடியாது.
அதேசமயம், டிசம்பர் 15ம் தேதி வரை குடிநீர்க் கட்டணம், மின் கட்டணம் போன்ற சில அத்தியாவசியச் சேவைகளுக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தலாம் என்று அது உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின் சாராம்சம்:
- 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் பயன்பாட்டை ரத்து செய்வது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து மத்திய அரசு பரிசீலித்தது. அதன் பேரில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பின்னர் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- வங்கிக் கவுண்டர்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வருவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. எனவே அதைத் தொடரத் தேவையில்லை என்று கருதுகிறது. எனவே மக்களிடம் கைவசம் உள்ள 500, 1000 பணத்தை அவர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் இனி செலுத்தலாம். எனவே இன்று நள்ளிரவுக்கு மேல் வங்கிக் கவுண்டர்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து மாற்றுவது நிறுத்தப்படுகிறது.
- வங்கிக் கணக்குகளில் மட்டுமே இனிமேல் பழைய செல்லாத நோட்டுக்களை டெபாசிட் செய்ய முடியும். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கி தங்களது பணத்தை அதில் டெபாசிட் செய்யலாம்.
- குடிநீர்க் கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைக் கட்டணங்களை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தி செலுத்த நவம்பர் 24ம் தேதி வரை சலுகை அளிக்கப்பட்டிருந்தது. அதை டிசம்பர் 12ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த அத்தியாவசியச் சேவைக் கட்டணத்தை செலுத்த பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே ஏற்கப்படும்.
மத்திய அரசு, மாநில அரசு, நகராட்சி, உள்ளூர் ஊராட்சிப் பள்ளிகளில் ரூ. 2000 வரையிலான பள்ளிக் கட்டணத்தை பழைய ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தி செலுத்தலாம்.
- மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கல்லூரிக் கட்டணத்தையும் பழைய ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தி செலுத்தலாம்.
- ரூ. 500 வரையிலான ப்ரீபெய்ட் டாப் அப்களை செலுத்த பழைய. 500 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தலாம்.
- நுகர்வோர் கூட்டுறவு அங்காடிகளில் ஒரு நேரத்தில் ரூ. 5000 வரை மட்டுமே பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும்.
- அத்தியாவசியச் சேவைப் பிரிவானது தற்போது குடிநீர் கட்டணம் மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் தனிநபர்கள் மற்றும் வீடுகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
- டிசம்பர் 2ம் தேதி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய சாலைப் போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே டிசம்பர் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம்.
- வெளிநாட்டினர் அன்னியச் செலாவாணியை மாற்றுவதற்கான உச்சவரம்பு வாரத்திற்கு ரூ. 5000 வரை உயர்த்தப்படும். இதுகுறித்து அவர்களது பாஸ்போர்ட்டுகளில் பதிவு செய்யப்படும். இதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பிக்கும் என்று நிதியமைச்சகத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.