காவிரி: தமிழக கோரிக்கை நிராகரிப்பு- மேலாண்மை வாரியத்துக்கு பதில் ஆணையம்- மத்திய அரசு பல்டி
காவிரி மேலாண்மை ஆணையம் என்றே வரைவு திட்டத்தில் மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது.
Recommended Video
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் என்று வரைவு திட்டத்தை திருத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசோ காவிரி மேலாண்மை ஆணையம் என்றே திருத்தம் மேற்கொண்டுள்ளது.
காவிரி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்கீம் என்ற வார்த்தையை காவிரி மேலாண்மை வாரியம் என்று மாற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
மேலும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தலைமையகம் பெங்களூரில் அமைக்காமல் டெல்லியில் அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் என வரைவு திட்டத்தை திருத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் எந்த வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இன்றைய தினம் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயர் வைத்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது இறுதி தீர்ப்பில் திருத்தப்படும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை மாலை வெளியாகிறது. இனி எந்த வாதத்துக்கும் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.