லைசென்ஸ் வாங்கப் போறீங்களா?... ஆதாரை சான்றாக காட்டலாம்... மத்திய அரசு க்ரீன் சிக்னல்!
ஓட்டுநர் உரிமம் பெற ஆதாரை முகவரி மற்றும் வயது சான்றாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: ஓட்டுநர் உரிமம் பெற ஆதாரை முகவரி மற்றும் வயது சான்றாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜ்யசபாவில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்து மூலம் தாக்கல் செய்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
ஆதாரை வங்கிக்கணக்கு மற்றும் செல்போன் எண்களுடன் இணைப்பது, அரசின் நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் எண் கட்டாயம் என்று அரசு அறிவிப்புகள் மேல் அறிவிப்புகளாக சொல்லி வருகிறது. இதற்கு மார்ச் மாதம் வரை காலக்கெடுவும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆதாரை அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு கட்டாயமாக்கலாமா என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் ராஜ்யசபாவில் மத்திய அரசு புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜ்யசபாவில் எழுத்து மூலம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் சட்ட அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அளிக்கப்படும் சான்று பட்டியலில் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனால் இனி ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதாரை வயது மற்றும் முகவரிச்சான்றாக பயன்படுத்தும் வகையில் மத்திய மோட்டார் வாகனச் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆதார் இல்லாத பட்சத்தில் பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ், எல்ஐசி ஆவணம் உள்ளிட்டவற்றையும் சான்றாக காட்டலாம்.












Click it and Unblock the Notifications