ஒரே மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமா?.. என்ன செய்யப் போகிறார் மோடி??
டெல்லி: காவிரி நதிநீர் பிரச்சனைக்கான தீர்வு இப்போது மத்திய அரசு கைகளுக்கு மாறியிருக்கிறது... கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என கனவில் இருக்கும் பாஜகவுக்கு இது 'அக்னிபரீட்சை'தான்.. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் என்னதான் செய்யும் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனைக்காக கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழகம்- கர்நாடகா- மத்திய அரசு என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. இதனால் 1990-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வெளியிடக் கோரி போராட்டங்கள் வெடித்தன. அப்படி இடைக்கால தீர்ப்பு வந்த போதும் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. இறுதித் தீர்ப்பு வந்தால் பிரச்சனை முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
மேலாண்மை வாரியம்
2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியான போது அரசிதழில் வெளியிட்டால்தான் பயன் கிடைக்கும் என கூறப்பட்டது. 2013-ம் ஆண்டு அரசிதழிலில் வெளியிட்ட பின்னர் மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் ஒரே தீர்வு என கூறப்பட்டது.
கேட்காத காங், பாஜக
இதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழகம் எவ்வளவோ போராடிப் பார்த்தது. ஆனால் முந்தைய காங்கிரஸ் மற்றும் தற்போதைய பாஜக அரசுகள் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தே வந்தன.
கர்நாடகாவுக்கே சாதகம்
இப்போது உச்சநீதிமன்றம் 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரையில் கர்நாடகாவில் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் அந்த மாநிலத்துக்கு சாதகமாகத்தான் செயல்பட்டு வந்தன.
கட்டுப்பாடுகள் கை மாறும்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்த உடனேயே மேலாண்மை வாரியத்தை காங்கிரஸ் அரசும் அமைக்கவில்லை.. பின்னர் வந்த பாஜக அரசும் அமைக்கவில்லை. இப்போது உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தால், கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகள் மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும்.
இழுத்தடிக்கும்?
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட இந்த மேலாண்மை வாரியமே நடவடிக்கை எடுக்கும்.. இனி கர்நாடகாவிடம் கையேந்த வேண்டி இருக்காது. ஆனால் இதை கர்நாடகா அரசியல் கட்சிகள் நிச்சயம் கடுமையாக எதிர்க்கவே செய்யும். அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என கனவு காணுகிறது பாஜக. ஆகையால் மத்திய பாஜக அரசு, ஏதாவது காரணத்தை சுட்டிக்காட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இழுத்தடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.