என்னது இது! மாட்டுச்சாண சூட்கேசுடன் வந்த முதல்வர்.. சத்தீஸ்கர் பட்ஜெட் தாக்கலில் சுவாரசியம்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மாட்டுச்சாணத்தில் தயாரிக்கப்பட்ட சூட்கேஸில் பட்ஜெட் தாக்கலுக்கான ஆவணங்களை எடுத்து வந்தார். இயற்கை விவசாயம், இயற்கை உரத்தை பயன்படுத்த வலியுறுத்தும் நோக்கில் அவர் இதை செய்து அசத்தினார்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். இவர் நிதித்துறையையும் தன்வசம் வைத்துள்ளார். மார்ச் 7 ம் தேதி இந்த ஆண்டின் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது.
மூன்றாவது நாளான இன்று முதல்வர் பூபேஷ் பாகல் 2022-2023ம் நிதியாண்டுக்கான சத்தீஸ்கர் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், வரவு, செலவு விபரங்களை எடுத்து கூறினார்.

மாட்டுச்சாண சூட்கேஸ்
முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று முதல்வர் பூபேஷ் பாகல் சட்டசபைக்கு வந்தார். பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய அவர் கையில் வைத்திருந்த சூட்கேஸ் பார்க்க வித்தியாசமாக இருந்தது. வழக்கமான பளபளப்பான சூட்கேஸ்களிலிருந்து அது வேறுபட்டு இருந்தது. விசாரித்ததில் சூட்கேஸ் இயற்கை முறையில் மாட்டுச்சாணத்தால் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இயற்கை விவசாயம், இயற்கை உரத்தை பயன்படுத்த வலியுறுத்தும் வகையில் முதல்வர் பூபேஷ் பாகல் மாட்டுச்சாண சூட்கேசை பயன்படுத்தியது தெரியவந்தது.

மாட்டுசாணம் வாங்கும் அரசு
முதல்வர் பூபேஷ் பாகல் அடிப்படையில் இயற்கை விவசாயம், இயற்கை உரங்களை ஆதரித்து வருகிறார். மேலும் கால்நடை வளர்ப்பையும் ஊக்குவித்து வருகிறார். விவசாயத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்கு இயற்கை உரங்களை பயன்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மாநிலத்தில் நிலவும் கால்நடைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். அத்துடன் இது கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என கூறினார். அத்துட்ன Godhan Nyay Yojana மூலம் 2020ல் மாடு வளர்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து மாட்டு சாணத்தை வாங்குவதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்தது. இது அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது.

பிரதமர் மோடி
பூபேஷ் பாகேல் மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களும் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மாட்டு சாணத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தி இருந்தனர். இதுதொடர்பாக 2021 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "நாம் இயற்கை விவசாய முறைகளுக்கு மாற வேண்டும். மாட்டுச்சாணத்தை பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க செய்யலாம்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு தேர்தல்
பூபேஷ் பாகேல் முதல்வராக உள்ள சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 14 இடங்களிலும் ஜேசிசி 3, பிஎஸ்பி கட்சிகள் 2 இடங்களிலும் வென்றன. ஒரு இடம் காலியாக உள்ளன. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications